ராவணன் தமிழன் இல்லையாம்.. "ஹிந்திவாலா" வாம்.. சொல்வது சு. சாமி!
ராமாயண கதாபாத்திரமான ராவணன் தமிழரே கிடையாது என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
டெல்லி: ராமாயண கதாபாத்திரமான ராவணன் தமிழரே கிடையாது என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி அடிக்கடி சர்ச்சைக்கு உரிய கருத்துக்களை பேசி பிரச்சனையில் சிக்குவார். பொதுவாக தமிழர்களுக்கு எதிராக நிறைய கருத்துக்களை சமூக வலைத்தளத்திலும் பேட்டியிலும் அவர் குறிப்பிடுவார்.
சமயங்களில் சொந்த பாஜக கட்சிக்கு எதிராக கூட பேசுவார். இந்த நிலையில் அவர் ராமாயணம் குறித்து பேசிய விஷயம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
திராவிடமும் ஆரியமும்
கோவாவில் நடைபெற்ற கலாச்சாரம் பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுப்ரமணியன் சுவாமி, திராவிடம் ஆரியம் என்ற விஷயம் பொய்யானது. நாம் எப்போதும் அப்படி பிரிந்து இருந்ததே இல்லை. இந்த எண்ணம் ஆங்கிலேயர்களால் விதைக்கப்பட்டது. இந்தியர்களை பிரிக்க அவர்கள் அப்படி செய்தனர்.
ராவணன் தமிழர்
ராவணன் ஒரு தமிழனே அல்ல. அவர் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அடிக்கடி எடுத்துக் காட்டுவது போல ராவணன் திராவிடர் கிடையாது. அவர் தமிழ்நாட்டில் வசிக்கவில்லை. அவரை தமிழர் என்று கூறுவது கட்டுக்கதை.
எங்கு பிறந்தார்
ராவணன் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் பிறந்தவர். உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பக்கத்தில் இருக்கும் பிஷ்ரக கிராமத்தில் பிறந்தவர் அவர். இன்றும் அந்த பகுதி இருக்கிறது. அவர் வாழ்ந்த போது தமிழகத்திற்கு வந்ததாக எந்த குறிப்பும் இல்லை.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை இந்தியா முழுக்க கொண்டாடப்படுகிறது. முதலில் இதை வடஇந்தியர்கள்தான் கொண்டாடினார்கள். தசரா பண்டிகையின் இறுதியில் இந்த விழா கொண்டாடப்படும். ராவணன் கொடும்பாவியை எரித்து மக்கள் இந்த விழாவை கொண்டாடி வந்தனர் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.