தொடரும் பல ஆயிரம் கோடி வங்கி மோசடி.. கடன் உத்தரவாத கடிதம் முறை ரத்து செய்து ஆர்பிஐ அதிரடி
வங்கிகளில் தொடரும் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியை தொடர்ந்து எல்ஓயு என்ற கடன் உத்தரவாத கடிதம் முறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.
டெல்லி: வங்கிகளில் தொடரும் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியை தொடர்ந்து எல்ஓயு என்ற கடன் உத்தரவாத கடிதம் முறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஊழியர்களின் உதவியுடன் நீரவ் மோடி ரூ.12,646 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் டெல்லியைச் சேர்ந்த வைர நகை நிறுவனமான துவாரகா தாஸ் இன்டர்நேஷனல் ஓரியண்டல் வங்கியில் ரூ.385.85 கோடி மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் டெல்லியைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்கள் பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ.6,000 கோடி மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
வங்கிகளில் கடன் பெறும் தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று தலைமறைவாகிவிடுகின்றனர். இதனால் வங்கிகள் கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் இழப்பை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில் எல்.ஓ.யு என்ற கடன் உத்தரவாத கடிதம் முறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. பல ஆயிரம் கோடி வங்கி மோசடியை அடுத்து கடன் உத்தரவாத கடிதம் முறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடியின் மோசடியை தொடர்ந்து ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.