குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்குக்குத் தயார்... பாலியல் சர்ச்சையில் சிக்கிய ஹைகோர்ட் நீதிபதி பதில்
குவாலியர்: தன் சுமத்தப்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பாக குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கு தண்டனைக்கு தயார் என மத்திய பிரதேச ஹைகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார்.
குவாலியரில் பாலியல் தொல்லை குறித்த வழக்குகளை விசாரித்து வரும் விசாகா குழுவின் பெண் தலைமை பெண் நீதிபதி, ‘தன்னை ஹைகோர்ட் நீதிபதி குத்துப்பாட்டுக்கு நடனம் ஆட வற்புறுத்தினார், இல்லையென்றால் என்னை இடமாற்றம் செய்து விடுவேன் என மிரட்டினார்' எனக் குற்றம் சாட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக தலைமை நீதிபதி லோதா கூறுகையில், ‘இவ்விவகாரம் தொடர்பாக குறித்து முறைப்படி புகார் பெறப்பட்டுள்ளது, மத்திய பிரதேச தலைமை நீதிபதியிடமும் அறிக்கை கேட்க உள்ளோம், அவரது அறிக்கை வந்த பிறகு இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நீதிபதி ஹைகோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில், ‘தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் தொந்தரவு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்குக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்விவகாரம் தொடர்பாக எந்த ஒரு விசாரணையும் சந்திக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.