அஸ்ஸாமில் மேலும் 9 உடல்கள் கண்டெடுப்பு- இன மோதல் பலி 32 ஆக அதிகரிப்பு- ஊரடங்கு உத்தரவு
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்கள் மீது போடோ தீவிரவாதிகள் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
அஸ்ஸாமின் கோக்ராஜ்கர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக போடோ பழங்குடி இனத்தைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு ஒன்று முஸ்லிம்கள் வாழும் கிராமங்களில் நுழைந்து தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலில் கடந்த 36 மணி நேரத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 32 பேர் பலியாகி உள்ளனர். இந்த வன்முறைக்கு போடோ பகுதி சிறுபான்மையினர் அமைப்புகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
போடோ பகுதியில் வன்முறை வெடித்துள்ள நிலையில் அங்கு துணை ராணுவப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு இதே கோக்ராஜ்கர் பகுதியில் போடோ பழங்குடிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் வெடித்து பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
காரணம் என்ன?
லோக்சபா தேர்தலில் போடோ பழங்குடி இனப் பிரதிநிதிகளுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனாலேயே போடோ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
கண்டதும் சுட உத்தரவு
இந்த மோதலைத் தொடர்ந்து கோக்ராஜ்கர் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications