நன்னடத்தை... கர்நாடகாவில் 14 ஆண்டுகளை சிறையில் கழித்த 375 ஆயுள் கைதிகள் விடுதலை!
பெங்களூரு: கர்நாடகாவில் நன்னடத்தை அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 375 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று முன்தினம் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதில், குடியரசுதினவிழாவின் போது மாநிலத்தின் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு, சுமார் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த 375 ஆயுள் தண்டனைக் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நேற்று குடியரசுதினமான நேற்று மாலை ஆயுள் தண்டனை பெற்று 14 ஆண்டு சிறை வாசம் அனுபவித்த 375 பேர் கர்நாடகத்தின் வெவ்வேறு சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்து 98 பேரும், விஜயாப்புரா சிறையில் இருந்து 38 பேரும், பெலகாவி சிறையில் இருந்து 114 பேரும், மைசூரு சிறையில் இருந்து 42 பேரும், தார்வார் சிறையில் இருந்து 10 பேரும், பல்லாரி சிறையில் இருந்து 23 பேரும், கலபுரகி சிறையில் இருந்து 50 பேரும் என மொத்தம் 375 ஆயுள் தண்டனை கைதிகள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இதில் 13 பேர் பெண் கைதிகள் ஆவார்கள்.
பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு அமைச்சர் பரமேஸ்வர் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.