இலவச கால்களுக்கு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது ஜியோ...மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு செக்!
இலவச தொலைபேசி அழைப்புகளை தவறாக பயன்படுத்துவோரின் முறைகேடுகளை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை ரிலையன்ஸ் ஜியோ கொண்டு வந்துள்ளது.
மும்பை: இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இலவச கால்களுக்கு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
3 மாதங்களுக்கு இலவச இணையதள வசதி, அன்லிமிடெட் வாய்ஸ் கால் என்று சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ சேவையை பலர் சுமார் 6 மாதங்கள் இலவசமாக பயன்படுத்தினர். இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கட்டண சேவையாக ஜியோ சேவை வழங்கப்படுகிறது.
கட்டண விகிதங்களுக்கு ஏற்ப டேட்டாக்கள்(இணையதள வசதி) வழங்கப்படுகின்றன, எனினும் எல்லா ஜியோ பயன்பாட்டாளர்களுக்கும் அளவில்லா தொலைபேசி அழைப்புகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த இலவச கால் வசதிகளை சிலர் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் அங்கீகரிக்கப்படாத டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் இவற்றை வணிக நோக்கத்தில் பயன்படுத்துவதால் ஜியோ தங்களது விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது.
இலவச அழைப்புகளுக்கு கட்டுப்பாடு
இதன்படி வணிக நோக்கதிற்காக ஜியோ நெட்வொர்க்கை பயன்படுத்துவோருக்கான இலவச கால் செய்யும் வசதி 300 நிமிடங்கள் அதாவது நாள் ஒன்றிற்கு 5 மணி நேரம் என்று குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர 3 விதங்களில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. நாள் ஒன்றிற்கு 5 மணி நேரம், அல்லது 7 நாட்களுக்கு 1200 நிமிடங்கள் அல்லது மாதம் ஒன்றிற்கு(28 நாட்களுக்கு) 3 ஆயிரம் நிமிடங்கள் என்று வரைபடுத்தியுள்ளது.
5 மணி நேர அழைப்பு மட்டுமே
நாள் ஒன்றிற்கு 5 மணி நேரத்திற்கு கால்கள் பேசப்பட்ட பின்னர் இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும். வாடிக்கையாளர் மீண்டும் அன்றையே நாளில் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ள வேண்டுமெனில் ரூ. 149க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறாக பயன்படுத்துவோருக்கு மட்டும்
ரிலையன்ஸ் ஜியோ மூலம் நாள் ஒன்றிற்கு 25 கோடி வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் செய்யப்படுவதாக ரிலையன்ஸ் நிறுவன ஆண்டுக் கூட்டத்தில் அதன் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இலவச தொலைபேசி அழைப்பு வசதி தவறாக பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர்டெல்லுடன் போட்டி போடும் ஜியோ
எனினும் இது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தாது என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனத்துடன் கடுமையான போட்டியில் உள்ள ஜியோவின் இந்த அறிவிப்பு மூலம் பின்னடைவு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்தும் விதமாக ஜியோ சிறப்பாக செயலாற்றி வருவதாகவும் அதன் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.