டோணிக்கு எதிரான பிடிவாரண்ட்டைத் திரும்பப் பெற்றது ஆந்திர கோர்ட்
அனந்தப்பூர்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை திரும்பப் பெற்றுள்ளது ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் கோர்ட்.
முன்னதாக கடவுள் விஷ்ணு வேடத்தில் டோணியின் படம் ஒரு பத்திரிகையின் அட்டைப் படமாக வெளி வந்தது தொடர்பான வழக்கில் ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட்டை அனந்தப்பூர் கோர்ட் பிறப்பித்திருந்தது.
ஜனவரி 7ம் தேதி இந்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. டோணியை பிப்ரவரி 25ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து டோணி சார்பில் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ர்ஜனீஷ் சோப்ரா மற்றும் பங்கஜ் பக்லா ஆகியோர் நேற்று அனந்தப்பூர் கோர்ட்டில் நீதிபதி கீதவாணி முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். டோணியிடம் பிடிவாரண்ட் போய்ச் சேரவில்லை என்றும் அவர்கள் விளக்கினர்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி பிடிவாரண்ட்டை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இதனால் இக்கட்டிலிருந்து தற்போதைக்குத் தப்பியுள்ளார் டோணி.