அரிசி இலவசம்.. ஆனால் அதை சமைக்க தேவையான சிலிண்டர்? மத்திய அரசை விளாசி தள்ளிய மம்தா
கொல்கத்தா: சிலிண்டர் உட்பட எரிபொருள் விலை ஏற்றம் குறித்து நடைபெற்ற பேரணியில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மக்களுக்கு அரசி இலவசமாகக் கிடைத்தாலும் அதைச் சமைக்க அதிகம் செலவழிக்க வேண்டி உள்ளதாக தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் இன்னும் சில நாட்களில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. திரிணாமுல் காங்கிரஸ், பாஜக என இரு முக்கிய கட்சிகளும் அங்குச் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று ஒரு புறம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். இதில் மேற்கு வங்க நடிகரும் முன்னாள் எம்பியுமான மிதுன் சக்கரவர்த்தி பாஜகவில் இணைந்தார்.
பாத யாத்திரை
மறுபுறம், பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையேற்றத்தைக் கண்டித்து சிலிகுரி பகுதியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பாத யாத்திரை நடத்தினார். இந்த பாத யாத்திரையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். குறிப்பாக, பெண்கள் காலி கேஸ் சிலிண்டர்களுடன் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர். இந்தப் பேரணியில் கேஸ் விலையேற்றத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மாற்றம் தேவை.. ஆனால்
இந்தப் பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, "வங்காளத்தில் மாற்றம் தேவை என்கிறார் அவர். உண்மையில் மத்தியில் தான் ஆட்சி மாற்றம் தேவை. பிரதமர் தினமும் பொய்களையே பேசி வருகிறார். மோடி இந்த நாட்டையே விற்கிறார். இந்த பாஜக அரசு மக்கள் விரோதம் அரசு, பெண்களுக்கு எதிரான அரசு, விவசாயிகளுக்கு எதிரான அரசு, இளைஞர்களுக்கு எதிரான அரசு. மத்தியில் உடனடியாக மாற்றம் தேவை" என்று கடுமையாக விமர்சித்தார்.
சிலிண்டர் விலை
தொடர்ந்து கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்துப் பேசிய அவர், "கேஸ் சிலிணடர் விலை தொடர்ந்து உயர்த்தப்படுகிறது. அரிசி இலவசமாகக் கிடைக்கிறது. ஆனால் அதைச் சமைக்க அதிகம் செலவிடவுள்ளது. நேற்றிரவு கூட கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இப்படியே போனால் விரைவில் கேஸ் சிலிண்டர் என்பது சாதாரண மனிதர்களுக்கு கிடைக்காத ஒரு பொருளாகிவிடும். நாம் இதுபோன்ற போராட்டங்களை நடத்தித் தான், நமது எதிர்ப்புகளைத் தெரிவிக்க வேண்டியுள்ளது" என்றார்
பெண்கள் பாதுகாப்பு
பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களின் விலையும் இதேபோல தான் உயர்ந்து வருகிறது என்றும் இதன் காரணமாக தான் சட்டமன்றத்திற்கு ஸ்கூட்டரில் சென்றேன் என்றும் அவர் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது என்றும் பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.
பிரதமர் மோடி
முன்னதாக, இன்று காலை கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "மேற்கு வங்க மக்களுக்கு உண்மையான ஒரு மாற்றம் தேவை. வங்காளத்தின் வளர்ச்சிக்காகவும், இங்குள்ள நிலைமையை மாற்றவும், முதலீடுகளை அதிகரிக்கவும் தான் நான் இங்கு வந்திருக்கிறேன்" என்று பேசினார். ஒரே நேரத்தில் பிரதமரின் பேரணி ஒரு புறம், முதல்வர் மம்தா பானர்ஜியின் போராட்டம் மறுபுறம் என நடைபெற்றது அம்மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.