வங்கி மோசடி.. ரோட்டோமேக் பென் நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி அதிரடி கைது!
கான்பூர்: வங்கி கடன் மோசடி தொடர்பாக, ரோட்டோ மேக் பென் நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரி, மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது. மேலும், கான்பூரிலுள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடந்து வருகிறது.
வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி முறைகேடு செய்த புகார் நாட்டை உலுக்கி வரும் நிலையில், பிரபலமான ரோட்டோமேக் பென் நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி, பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு ரூ 800 கோடி கடனை திரும்ப செலுத்தவில்லை என புகார் எழுந்தது. அவர் வெளிநாடு தப்பி விட்டதாகவும் செய்திகள் வந்தன.
இதனிடையே தான், கான்பூரில்தான் இருப்பதாக விக்ரம் கோத்தாரி ஒரு விளக்கத்தை அளித்திருந்தார். இந்த மோசடி புகார் வெளியே தெரியவந்துள்ள நிலையில் சிபிஐ அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. கான்பூரில் விக்ரம் கோத்தாரியின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 3 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது.
#UPDATE: Latest visuals from from Rotomac Pens owner #VikramKothari residence as CBI raid is underway. pic.twitter.com/6R0NBW6cKO
— ANI UP (@ANINewsUP) February 19, 2018
ரெய்டு ஒரு பக்கம் நடந்தபோது, விக்ரம் கோத்தாரியை சிபிஐ கைது செய்துள்ளது. நீரவ் மோடி போல விக்ரம் கோத்தாரியும் தப்பிவிட கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக கைது நடவடிக்கை பாய்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே விக்ரம் கோத்தாரி, மொத்தமாக ரூ.4,232 கோடி ரூபாய் கடன் மோசடி செய்து இருக்கிறார் என்று கண்டுபிடிக்கப்பட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கான வட்டியோ, அசலோ ஒருவருடம் ஆகியும் கூட, 1 ரூபாய் கூட கொடுக்கவில்லை. இவர் மொத்தம் 5 வங்கிகளில் கடன் வாங்கி இருக்கிறார். இவர் கொடுத்த 600 ரூபாய் செக் கூட பவுன்ஸ் ஆகி திரும்ப வந்து இருக்கிறது.