ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஜனாதிபதியாக வேண்டும்.. மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்!
பிரணாப் முகர்ஜிக்கு அடுத்து குடியரசுத் தலைவராக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தான் வர வேண்டும் என பிரதமர் மோடிக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜாபர் ஷெரிப் கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தான் இந்திய குடியரசுத் தலைவராக வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜாபர் ஷெரிப், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தற்போது, குடியரசுத் தலைவராக பதவி வகிக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியோடு நிறைவடைகிறது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை, அடுத்த குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கர்நாடக காங்கிரஸ்கட்சி மூத்த தலைவரும் முன்னாள் ரயில்வே துறை அமைச்சருமான ஜாபர் ஷெரிப் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது காங்கிரஸ் தலைவர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்கடிதத்தில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும். அவ்வகையில் மோகன் பகவத் இந்துத்துவா கொள்கையை ஆதரிக்கிறார். இந்தியா போன்ற பெரிய நாட்டில் மாறுபட்ட கொள்கைகள் இருப்பது இயல்பே. அதற்காக பகவத்தின் நாட்டுப்பற்றையும், மக்கள் மீது அவர் கொண்டுள்ள அன்பையும் நேர்மையையும் சந்தேகிக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மோகன் பகவத் குடியரசுத் தலைவாரகத் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் வீழ்த்துவோம் என கூறியுள்ள நிலையில் தான் ஷெரிப் இக்கடிதத்தை எழுதியுள்ளார்.
மோகன் பகவத் குடியரசுத் தலைவராக வேண்டும் என சிவசேனா முன்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள மோகன் பகவத், இப்பேச்சுகள் நல்ல பொழுதுபோக்கு என கூறியுள்ளார்.
''இங்கிலாந்தில் வசிப்போர் ஆங்கிலமும், ஜெர்மனியில் வசிப்போர் ஜெர்மனியர்களாகவும், அமெரிக்காவில் வசிப்போர் அமெரிக்கர்களாகவும் இருக்கும் போது, இந்தியாவில் வசிப்போர் ஏன் இந்துக்களாக இருக்க முடியாது? அடுத்த 5 ஆண்டுகளில் நாம் இந்த நாட்டில் இந்துக்களிடையே சமத்துவத்தை உருவாக்க தீவிரமாக பணியாற்ற வேண்டும். அனைத்து இந்துக்களும் ஒரே இடத்தில் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும்'' என்பது போன்ற கருத்துக்களை கூறிவருபவர் தான் மோகன் பகவத் என்பது குறிப்பிடத்தக்கது.