மஸ்ரத் ஆலம் விடுதலை குறித்து காஷ்மீர் அரசு எங்களுக்கு சொல்லலையே..: பிரதமர் மோடி விளக்கம்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் மஸ்ரத் ஆலம் விடுதலை செய்யப்பட்டது ஜம்மு காஷ்மீர் மாநில அரசு, மத்திய அரசிடம் ஆலோசிக்கவும் இல்லை.. தெரிவிக்கவும் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத் தலைவர் மஸ்ரத் ஆலம் உட்பட அரசியல் கைதிகளை விடுவிக்க அம்மாநில அரசு முடிவு செய்தது. முதல் கட்டமாக மஸ்ரத் ஆலம் விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கு காஷ்மீர் அரசில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் காஷ்மீர் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன. உள்துறை அமைச்சகமும் மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. மஸ்ரத் ஆலம் விடுதலை குறித்து மத்திய அரசு மவுனமாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பார் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு உறுதி அளித்தார். மேலும் ஆலம் விடுதலை குறித்து மத்திய அரசுடன் காஷ்மீர் அரசு எந்த ஒரு ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்றார்.
ஆனாலும் இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். இதனால் அமளி நீடிக்கவே சபை நடவடிக்கைகள் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டன.
இதே விவகாரம் ராஜ்யசபாவிலும் எதிரொலித்தது. அப்போது பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, நாட்டின் தேசப் பாதுகாப்பில் மத்திய அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்றார்.
பின்னர் லோக்சபாவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இது தொடர்பாக விளக்கம் அளித்து பேசினார். அவர் பேசியதாவது:
இந்த விவகாரம் நாட்டின் பாதுகாப்பு பிரச்சனை. எங்களுடைய அரசு பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் சமரசம் செய்துக் கொள்ளது.
மஸ்ரத் ஆலம் விடுதலை தொடர்பாக நாங்கள் ஜம்மு காஷ்மீர் அரசிடம் இருந்து அறிக்கை பெற்று உள்ளோம். கடந்த 1995ம் ஆண்டுக்கு பின்னர் ஆலமுக்கு எதிராக 27 வழங்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் அரசு அளித்துள்ள அறிக்கையில் அனைத்து வழக்குகளிலும் நீதிமன்றம் ஆலமுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில உள்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையில் நாங்கள் முழுவதும் மகிழ்ச்சி அடையவில்லை. மாநில அரசிடம் இருந்து மேலும் விளக்கம் கேட்டு உள்ளோம்.
நாங்கள் இவ்விவகாரத்தை மிகவும் முக்கியமானதாக எடுத்துக் கொண்டுள்ளோம். மாநில அரசிடம் இருந்து விளக்கம் பெற்றப்பட்ட பின்னர் தேவைப்பட்டால் கடுமையான ஆலோசனை வழங்கப்படும் என்றார்.
இதேபோல் பிரதமர் மோடி பேசுகையில், மத்திய அரசின் ஒப்புதலுடன் ஆலம் விடுதலை செய்யப்படவில்லை. இது தொடர்பாக மத்திய அரசுக்கு எந்த ஒரு தகவலும் கொடுக்கப்படவில்லை.
நாடாளுமன்றம் மற்றும் நாடு முழுவதும் காட்டப்படும் கோபத்திற்கு நானும் ஆதரவுக் குரல் கொடுக்கிறேன். தேசத்தின் ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் எந்தஒரு நடவடிக்கையும் மத்திய அரசு சகித்துக் கொள்ளாது என உறுதி அளிக்க விரும்புகிறேன்.
தேசத்தின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனையில் சமரசம் செய்து கொள்ளாது என்று உறுதி அளிக்கிறேன். இது ஒரு கட்சியின் கோபம் இல்லை, ஒட்டு மொத்த நாட்டின் கோபம் ஆகும்.
ஆலம் விடுதலை தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளோம். விளக்கம் தெரிவிக்கப்பட்டதும் உங்களிடம் தெரியபடுத்துவோம்.
இவ்வாறு பிரதமர் மோடி விளக்கம் கொடுத்தார்.