ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் 16ல் திறப்பு: தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு அறிவித்துள்ள
சபரிமலை: ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை வரும் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 21 ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.
கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாதாந்திர பூஜை பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஐப்பசி மாத பூஜையில் பங்கேற்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆன்- லைனில் முன்பதிவு செய்த 1000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஐயப்பன் கோவில்
கார்த்திகை மாதம் மண்டல பூஜை காலத்தில் தினமும் 3 ஆயிரம் பக்தர்களுக்கும், மகர விளக்கு பூஜை காலத்தில் 5 ஆயிரம் பக்தர்களுக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.

வழிபாட்டுத்தலங்கள்
சித்திரை மாத விஷூ பூஜைக்குப் பிறகு கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கவே பக்தர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டது. கொரோனா இரண்டாவது அலை தற்போது நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா பரவல் விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்ததையொட்டி கோவில்கள், ஆலயங்கள், மசூதிகள் உள்பட வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன.

பக்தர்களுக்கு அனுமதி
கேரளாவில் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிக்கலாமா? என்பது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை மேற்கொண்டது.

6 நாட்கள் பூஜை
இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின்பு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம், இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

5 ஆயிரம் பக்தர்கள்
ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து உள்ளது. தினசரியும் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து உள்ளது. இன்று மாலை முதல் பக்தர்கள் சபரிமலை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications