சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை, மகரவிளக்கு தரிசனம் - ஆன்லைன் புக்கிங் முடிந்தது
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜை காலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன் பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே முடிவடைந்தது.
பத்தனம் திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை சீசன், மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன் பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே முடிவடைந்தது. இதனால் அதிர்ச்சிஅடைந்துள்ள ஐயப்ப பக்தர்கள் கூடுதல் நபர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கடுமையாக ஒரு மண்டல காலம் விரதம் இருந்து சபரிமலைக்கு யாத்திரை செல்வது வழக்கம். மண்டல பூஜை காலத்திலும் தை முதல்நாள் மகர விளக்கு தரிசனம் வரையிலும் பக்தர்கள் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்ய அலைமோதுவார்கள்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய சபரிமலையில் அனுமதிக்கப்படவில்லை. எட்டு மாதங்களுக்குப் பிறகு ஐப்பசி மாதத்தில் துலா மாத பூஜைக்காக குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடைத்தது.
பொதுவாக மலையாள மாதத்தின் முதல் நாளில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும், சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாத மாதம் சில நாட்கள் நடை திறந்திருக்கும். அந்த நாட்களில் குறைந்த அளவிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். மண்டல பூஜை காலத்திலும் மகர விளக்கு பூஜை காலத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சபரிமலையில் குவிவார்கள்.
இந்த ஆண்டு மண்டல பூஜை காலம் வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெறும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கேரள தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரையின் படி நடப்பு ஆண்டில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை தரிசனத்திற்கு, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினசரி ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 2 ஆயிரம் பக்தர்கள் வீதமும், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நாளில் 5 ஆயிரம் பக்தர்கள் வீதமும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.
மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி பக்தர்கள் சாமியை தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன் பதிவு நவம்பர் 1ஆம் தேதியான நேற்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே சீசன் முழுமைக்குமான தரிசன முன் பதிவு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள ஐயப்ப பக்தர்கள் சீசன் காலங்களில் கூடுதலான பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பக்தர்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தரிசனத்திற்கு 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட இந்த மருத்துவ சான்றிதழை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். மேலும் மருத்துவ காப்பீடு அட்டையும் கொண்டு வர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் குளிப்பதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களைப் போல ஐயப்பனுக்கு பக்தர்கள் நேரடியாக நெய் அபிஷேகம் செய்ய முடியாது. அதே நேரத்தில் அபிஷேகத்திற்கான நெய் பாத்திரங்களை அதற்காக அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு கவுண்ட்டரில் ஒப்படைக்க வேண்டும். அபிஷேகத்திற்கு பின் நெய் பாத்திரம் பக்தர்களுக்கு வழங்கப்படும். வழக்கம் போல் அரவணை, அப்பம் ஆகியவை சிறப்பு கவுண்ட்டர்கள் மூலமாக விற்பனை செய்யப்படும்.
ஆன் லைன் புக்கிங் முடிவடைந்து விட்டதால் இந்த ஆண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய முடியாதோ என்று பல லட்சம் பக்தர்கள் ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர். பக்தர்களுக்கு ஐயப்பன் தரிசனம் தருவாரா? தேவசம் போர்டு நிர்வாகம் மனமிறங்குமா பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications