"துரோகம்".. உள்ளடி வேலை பார்த்த பாஜக தலைவர்கள்.. இமாச்சலில் சாயம் போகும் காவிக்கொடி.. என்னாச்சு?
சிம்லா: அண்மையில் நடைபெற்று முடிந்த இமாச்சல் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைவர்கள் பலரே அக்கட்சிக்கு எதிராக உள்ளடி வேலை பார்த்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒரு தொகுதி, இரண்டு தொகுதி என இல்லாமல் பல தொகுதிகளில் இந்த வேலை நடந்திருப்பதால் இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக வெற்றி பெறுவது சாத்தியமே இல்லை என அக்கட்சியினரே கூறி வருகின்றனர்.
இந்த விஷயம் தற்போது டெல்லி பாஜக தலைமையின் காதுகளுக்கு சென்றுள்ள நிலையில், யார்-யார் எல்லாம் இந்த செயலில் ஈடுபட்டார்கள் என லிஸ்ட் கேட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
என்னவாகும் நட்டாவின் அரசியல் எதிர்காலம்.. இமாச்சல் தேர்தல் ரொம்பவே முக்கியம்! தோற்றால் அவ்வளவுதான்
முனைப்பு காட்டிய பாஜக..
68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்துக்கு கடந்த 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இமாச்சல் தேர்தலும், குஜராத் தேர்தலும் கருதப்பட்டதால் இவற்றுக்கு அரசியல் கட்சிகள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றின. குறிப்பாக, இமாச்சலில் எப்பாடு பட்டாவது ஆட்சியை தக்க வைத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக இறங்கி வேலை செய்தது பாஜக.
வேலையை காட்டிய அதிருப்தி தலைவர்கள்..
இதனிடையே, இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்கனவே இருந்த பாஜக எம்எல்ஏக்கள் பெரும்பாலானோர் மீது சம்பந்தப்பட்ட தொகுதி மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக உளவுத் துறை கட்சி தலைமைக்கு அறிக்கை வழங்கி இருந்தது. மீண்டும் இவர்களை அந்தத் தொகுதிகளில் களம் இறக்கினால் வெற்றி வாய்ப்பு பறிபோகும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனைக் கருத்தில்கொண்ட பாஜக தலைமை, இந்த முறை பல புதுமுகங்களுக்கும், இளைஞர்களுக்கும் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. கட்சித் தலைமையின் இந்த செயல், பழைய எம்எல்ஏக்களுக்கும், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் மூத்த நிர்வாகிகள் பெரும்பாலானோர், தங்கள் தொகுதிகளில் தேர்தல் வேலையை செய்யாமல் தவிர்த்துள்ளனர்.
சுயேச்சையாக போட்டி..
அதுமட்டுமல்லாமல், தங்கள் தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எதிராக அவர்களே சுயேச்சையாக நின்று போட்டியிட்டுள்ளனர். இல்லையெனில், தங்களுக்கு தெரிந்த நபர்களை சுயேச்சையாக நிற்க வைத்துள்ளனர். குறிப்பாக, கங்காரா மாவட்டத்தில் உள்ள பல தொகுதிகளில் இந்த உள்ளடி வேலை நடந்திருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. கங்காரா மாவட்டத்தில் எந்தக் கட்சி வெற்றி பெறுகிறதோ, அதுதான் இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் என்பது விதி. அப்படியிருக்கையில், பாஜக இந்த முறை வெற்றி பெறுவது கடினம் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கோபம் - கொண்டாட்டம்..
இந்நிலையில், இந்த உள்ளடி வேலைகள் தொடர்பான ஆடியோ கிளிப்புகளும், வீடியோக்களும் இமாச்சலப் பிரதேசத்தில் அடுத்தடுத்து வெளியே வந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த விவகாரம் டெல்லி பாஜக தலைமைக்கு தெரியவந்துள்ளதால் பெரும் பிரளயம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, யார் யார் எல்லாம் இதுபோன்ற உள்ளடி வேலைகளில் ஈடுபட்டார்கள் என்ற பெயர் பட்டியலை இமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாக்குரிடம் பாஜக தலைமை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, பாஜக இந்த முறை எப்படியும் தோற்றுவிடும் எனத் தெரிந்து கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.