கேரள அமைச்சர்களை விடாமல் துரத்தும் பாலியல் புகார்கள்!
கேரளாவில் அமைச்சர்கள் பாலியல் புகாரில் சிக்குவது தொடர் கதையாகியுள்ளது. கடந்த 54 வருடங்களில் 5 அமைச்சர்கள் இவ்வாறு புகார்களில் சிக்கி பதவி விலகியுள்ளனர்.
திருவனந்தபுரம்: சசீதரன்.. 1963லிருந்து கணக்கெடுத்தால் பாலியல் புகாரில் ராஜினாமா செய்யும் 5வது கேரள அமைச்சர்.
1963ல் உள்துறை அமைச்சராக இருந்த பி.டி.சாக்கோ மீது பாலியல் புகார் வந்தபோது அதுவரை கேட்டறியாத அநியாயம், என கொந்தளித்தது கேரளம்.
முதல்வர் ஆர்.சங்கர் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா கடிதம் பெறப்பட்டு வெளியே அனுப்பப்பட்டார் சாக்கோ.
சைரன் வைத்த அரசு காரில் திருச்சூர் பீச்சி அணைக்கட்டுக்கு அமைச்சர் காரில் சென்றபோது ஒரு விபத்து ஏற்பட, அப்போது, காருக்குள் ஒரு பெண்ணும் இருந்ததை உலகமே பார்த்து சிரித்ததால் அந்த ராஜினாமா நாடகம் அரங்கேறியது.
விபச்சார புகார்
கலர்ஃபுல்லான ஒரு செக்ஸ் ஸ்கேன்டலில் சிக்கியவர் இந்திய முஸ்லிம் லீக் தலைவராக இருந்த குன்ஹலிகுட்டி. 1996ல் அவர் சிக்கிய இந்த ஸ்கேன்டலுக்கு பத்திரிகைகள் வைத்த பெயர், ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் ஸ்கேன்டல். கோழிக்கோட்டில் ஐஸ்கிரீம் பார்லரில் விபச்சார தொழில் நடத்தியதால் இந்த பெயர் பெற்றது.
10 வருடம் கழித்து
ஏ.கே.அந்தோணி தலைமையிலான அமைச்சரவையில் தொழில் மற்றும் நகராட்சி துறை அமைச்சராக இருந்த குன்ஹலிகுட்டி தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. ஆனால், 2005ல் அவர் மீண்டும் தொழில்துறை அமைச்சராக உம்மன் சாண்டி அமைச்சரவையில் பதவியேற்றபோது, மக்கள் போராட்டத்தால் பதவியை ராஜினாமா செய்தார்.
பெண் அதிகாரிகள் புகார்
இ.கே.நாயனார் தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த நீலலோகிதா தாசன் மீது ஐஏஎஸ் மற்றும் ஐஎப்எஸ் பெண் அதிகாரிகள் இருவர் பாலியர் சீண்டல் புகார் கொடுத்ததையடுத்து 2000மாவது ஆண்டில் பதவியை விட்டு விலகினார்.
பயணிக்கு தொல்லை
அதேபோல அச்சுதானந்தன் அமைச்சரவையில் பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த பி.ஜே.ஜோசப் 2006ல் தனது பதவியை ராஜினாமா செய்தார். சக பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அவர் பதவியை ராஜினாமா செய்தார்.