ஸ்பெஷல் மெனு அதிரடி ரத்து.. இனி ரொட்டியும், தயிர் சோறும்தான்.. சிறையில் சசிகலா பாடு திண்டாட்டம்
பெங்களூர்: சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் சிறைத்துறை டிஐஜி ரூபா கூறிய புகார் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் அனலை கிளப்பியதற்கு நடுவே, ரூபா போக்குவரத்து துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
கண்காணிப்பாளரும் மாற்றம்
இதனிடையே சிறையின் சூப்பிரன்டெண்ட் கிருஷ்ணகுமாரும் ஊழலுக்கு உடந்தையாக இருப்பதாக வெளியான புகார்களை தொடர்ந்து அவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அச்சத்தில் அதிகாரிகள்
சிறைக்குள் இனியும் சசிகலாவுக்கு சலுகைகளை தொடர்ந்தால் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தால், அதிகாரிகள் அவருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்துள்ளனர். சிறையில் வழங்கப்படும் மெனுப்படி அவர் இதுவரை சாப்பிடவில்லை. ஸ்பெஷலாக சாப்பிட்டு வந்தார். ஆனால் நேற்று முதல் அவரின் விஐபி சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரொட்டிதான்
நேற்று காலை 7.30 மணிக்கு மற்றக் கைதிகளுக்கு வழங்கப்படும் எலுமிச்சை சாதம் சசிகலாவுக்கும் வழங்கப்பட்டது. முன்பெல்லாம், இட்லி, தோசைகளை ஸ்பெஷலாக சாப்பிட்டு வந்தார். மதியம் அசைவம் இல்லாமல் சசிகலாவால் இருக்க முடியாது. சிறப்பு சமையல்காரர் மூலம் அது தயாரிக்கப்பட்டுவந்துள்ளது. ஆனால் நேற்று, பிற கைதிகளுக்கு போல ராகி ரொட்டியும், தயிர் சாதமும் வழங்கப்பட்டன.
ஆடைகளில் அதே சலுகை
அதேநேரம், சசிகலா முன்பு போலவே சொந்த ஆடைகளை அணிந்து வருகிறார். ஏழு அல்லது அதற்கு மேல் வருடங்கள் சிறை தண்டனை பெற்ற கைதிகளுக்கு வெள்ளை உடை கட்டாயம். ஆனால், சசிகலா 4 வருட சிறை கைதி. மேலும், சிறப்பு அனுமதி கேட்டிருந்ததால் கலர் உடை அணிய கிருஷ்ண குமார் அனுமதித்திருந்தார்.
டிவி கட்
வழக்கமாக காலையிலேயே எழுந்துவிடும் சசிகலா, சிறை நூலகத்தில் இருப்பாராம். 10 மணிக்கு மேல் பார்வையாளர்களைச் சந்திப்பாராம். ஆனால் நேற்று அவர் அவரை பூட்டி வைத்திருக்கும் அறையிலிருந்து வெளியே வரவில்லை. அவருக்கு சிறப்பு வசதியாக கொடுக்கப்பட்டிருந்த டிவி சேனல்களின் கனெக்ஷன் நேற்று துண்டிக்கப்பட்டது. ஆனால் இதெல்லாம் எத்தனை நாட்களுக்கு என்பது கேள்விக்குறி. ரூபா போன்ற நேர்மையான அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பு இல்லாவிட்டால் மீண்டும் பணம் பரப்பன அக்ரஹாரா வரை பாயக்கூடுமே என்பதுதான் பொதுமக்கள் கேள்வி.