சசிகலாவுக்கு சிறையில் சலுகை... விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல்
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவிற்கு சலுகைகள் அளிக்க லஞ்சம் பெற்றது தொடர்பான விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வினய்குமார் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு : பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை கைதி சசிகலாவிற்கு சலுகை வழங்கியது தொடர்பான புகாரை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு இன்னும் சில தினங்களில் அரசிடம் அறிக்கையை அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொது செயலாளர் சசிகலாவுக்கு சிறப்பு மருத்துவம், அறையில் வசதிகள், பணியாட்கள் உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்காக அவர் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு பின்னர் ஓய்வு பெற்றார்.
சசி லீக்ஸ்
ஊடகங்களில் சசிகலாவின் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. விதிகளை மீறி சசிகலாவும், இளவரசியும் சிறையை விட்டு வெளியே சென்று வந்தது தெரியவந்தது. சசிகலா தினசரியும் இஷ்டம் போல தனக்கு பிடித்த உணவுகளை சமைத்து சாப்பிட்டதும் அம்பலமானது.
டிஐஜி ரூபா புகார்
இந்த சம்பவம் மாநில காவல்துறையில் புயலை கிளப்பியது. டிஐஜி ரூபா கொடுத்துள்ள புகார் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் சிறப்பு விசாரணை படை அமைக்கப்பட்டுள்ளது. அவர் விசாரணை நடத்தி வருகிறார்.
வினய்குமார் விசாரணை
புகார் தொடர்பாக 70 சதவீத பணியை வினய்குமார் முடித்துள்ளதாகவும், இரண்டொரு நாளில் டிஐஜி ரூபா மற்றும் ஓய்வு பெற்ற டிஜிபி சத்யநாராயணராவ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி விவரம் பெற்றபின், அரசு கொடுத்த ஒருமாத காலகெடுவுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.
அறிக்கை தயார்
வினய்குமார் தனது விசாரணை அறிக்கையை இன்னும் சில தினங்களுக்குள் அரசிடம் ஒப்படைப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் சசிகலாவிற்கு சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு தண்டனை காலம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.