சசிகலாவும், தினகரனும் எங்களுடன் இணையப்போகிறார்கள்.. தம்பிதுரை பேட்டியால் 'ட்விஸ்ட்'!
சசிகலாவும் தினகரனும் எங்களுடன் விரைவில் இணைவார்கள் என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
டெல்லி: சசிகலாவும், தினகரனும் விரைவில் எங்களுடன் வந்து இணைவார்கள் என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பான கருத்துக்கு தாம் பதிலளிக்க விரும்பவில்லை என்றார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைய சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பினர் நிபந்தனை விதித்தனர்.
இந்த இரு நிபந்தனைகளில் முதல் நிபந்தனையை எடப்பாடி தரப்பினர் நிறைவேற்றினர். ஆனால் ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லாததால் விசாரணை கமிஷன் அமைக்க முடியாது என்பதில் எடப்பாடி தரப்பினர் பிடிவாதம் காட்டி வந்தனர்.
ஓபிஎஸ் பிடிவாதம்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்தால் மட்டுமே அதிமுகவின் இரு அணிகளும் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று ஓபிஎஸ் தரப்பினர் பிடிவாதமாக கூறிவிட்டனர். இதனால் விசாரணை கமிஷன் அமைப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். இரு அணிகளும் இணைந்தது.
பொதுச்செயலாளர் பதவி
அதிமுக பொதுக் குழு கூட்டப்பட்டு சசிகலா வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியை பறித்தனர். அதேபோல் தினகரனுக்கு எதிராகவும் தீர்மானம் போட்டனர்.
அமைச்சர்களின் முரண்பட்ட கருத்து
இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் , அப்பல்லோவில் ஜெயலலிதாவை எந்த அமைச்சர்களும் பார்க்கவில்லை என்றும் அவர் இட்லி சாப்பிட்டதாக சசிகலா கூற சொன்னதால் கூறினோம் என்றும் தெரிவித்தார். இதனால் பல்வேறு குழப்பங்கள் வந்தன. மற்ற சில அமைச்சர்கள் ஜெயலலிதாவை பார்த்ததாக கூறி வருகின்றனர்.
40 நாள்களுக்கு பிறகு
விசாரணை கமிஷன் அமைப்பதாக கூறி 40 நாள்கள் ஆகியும் நீதிபதியை நியமிக்கவில்லை என்றும் எதிர்க்கட்சியினரும், தினகரன் தரப்பினரும் குற்றம்சாட்டினர். இதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு நியமித்தது.
தம்பிதுரை கருத்து
இந்நிலையில் ஜெயலலிதாவை பார்த்தது குறித்து தம்பிதுரையிடம் செய்தியாளர்கள், டெல்லியில் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான அமைச்சர்கள் கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை என நழுவினார்.
விரைவில் இணைவர்
ஜெயலலிதாவை பார்த்தேனா, இல்லையா என்பதை விசாரணை ஆணையத்திடம் தெரிவிப்பேன். சசிகலா, தினகரன் எங்களுடன் விரைவில் இணைவர் என்று கூறியுள்ளார். பொதுக் குழு கூட்டத்தில் சசிகலா, தினகரனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலும், அதிமுக இணைய காரணமாக இருந்ததே சசிகலா, தினகரன் ஒதுக்கி வைப்பது என்ற முடிவுதான் என்கிற போதிலும் தம்பிதுரை இவ்வாறு கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.