சசிகலா முதல்வராக பதவியேற்க தடை கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு- இன்று விசாரணை
சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க தடை விதிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது
டெல்லி: தமிழகத்தின் முதல்வராக சசிகலா பதவியேற்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற உள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ..க்கள் கூட்டத்தில் சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதையடுத்து சசிகலாவும் தாம் முதல்வர் பதவியை ஏற்கப் போவதாக கூறியுள்ளார்.

சசிகலா இன்றோ அல்லது ஓரிரு நாட்களிலோ முதல்வராக பதவியேற்க கூடும். இதனிடையே சசிகலா முதல்வராக பதவியேற்க தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் நேற்று வழக்கு தொடர்ந்துள்ளது.
சட்டப் பஞ்சாயத்துக்கு இயக்கம் தாக்கல் செய்துள்ள மனுவில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்க்கும் மேல்முறையீட்டு மனு மீது ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. ஆகையால் சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இதனால் சசிகலா முதல்வராக பொறுப்பேற்பதில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications