ஆர்எஸ்எஸ் மீதான விமர்சனம்: ராகுல் மன்னிப்பு கேட்க சுப்ரீம்கோர்ட் உத்தரவு
டெல்லி: மகாத்மா காந்தி படுகொலைக்கு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கமே காரணம் என்ற பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் அவதூறு வழக்கை சந்திக்க வேண்டும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் சோனாலி என்னும் இடத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்தான் மகாத்மா காந்தியைக் கொலை செய்தனர் எனக் கூறியிருந்தார். இதையடுத்து தானே மாவட்ட ஆர்.எஸ்.எஸ். செயலாளர் ராஜேஷ் குண்டே சார்பில் பிவாண்டி நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இம்மனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனுவை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ராகுல் காந்தி மன்னிப்பு கோரினால் வழக்கை முடித்துக் கொள்ளலாம் என்ற யோசனையை முன்வைத்தனர். ஆனால், ராகுல் காந்தி தரப்பு இந்த யோசனையை நிராகரித்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போதும் நீதிபதிகள், ஆர்எஸ்எஸ் இயக்கம் தொடர்பான பேச்சுக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அவதூறு வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதே நேரத்தில் ராகுல் காந்தி தரப்பில், அவர் பேசியது வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில்தான் என வாதிடப்பட்டது.
இதன் பின்னர் வரும் 27-ந் தேதிக்குள் ராகுல் தரப்பு தமது வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.