நீட் தேர்வுக்கு எதிராக கடையடைப்பு நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு - உச்சநீதிமன்றம்
நீட் தேர்வுக்கு எதிராக கடையடைப்பு, சாலைமறியல் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லி: நீட் தேர்வை எதிர்த்து கடையடைப்பு, வேலை நிறுத்தம் செய்வது நீதிமன்ற அவமதிப்பு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா மருத்துவ படிப்பு படிக்க முடியாத காரணத்தினால் கடந்த 1ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது.
தடை கோரி வழக்கு
இதனிடையே, நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நடந்துவரும் போராட்டங்களுக்குத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஜி.எஸ்.மணி என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழக அரசு சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கவும், அரசியல் கட்சியினர் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் தடை விதிக்க வேண்டும்.
அனிதா மரணத்திற்கு விசாரணை
சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு நிகராக மாநிலப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும். அனிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
உச்சநீதிமன்றம் விசாரணை
அனிதா மரணம் தொடர்பாக அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கை, அவசர வழக்காக ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொண்டது.
நீதிமன்ற அவமதிப்பு
வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று தீர்ப்பளித்தனர். போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது. கடையடைப்பு, போராட்டம், சாலை மறியல் நடத்துவது நீதிமன்ற அவமதிப்பாகும்.
வழக்கு ஒத்திவைப்பு
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு இதனை கையாள வேண்டும். தமிழக அரசு சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறி வழக்கை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
டிடிவி தினகரன் போராட்டம்
நாளை நீட் தேர்வுக்கு எதிராக டிடிவி தினகரனும், செப்டம்பர் 12ஆம் தேதியன்று இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவும் போராட்டம் அறிவித்துள்ளனர். அவை நடக்குமா என்று தெரியவில்லை.
நீட் நகல் எரிப்பு போராட்டம்
அதேபோல நீட் சட்ட எரிப்பு நகலை எரிக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன். இந்த போராட்டம் தடையை மீறி நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.