முத்தலாக் வழக்கு சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்.. மே 11 முதல் விசாரணை
டெல்லி: முத்தலாக் வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மே 11ம் தேதி முதல் இந்த விசாரணை நடைபெற உள்ளது.
முஸ்லிம்களிடையே வழக்கத்திலுள்ள முத்தலாக் விவகாரத்து, பலதார மணம் உள்ளிட்ட நடைமுறைகள் இந்திய சட்டப்படி செல்லுபடியாகுமா என்று கேள்வி எழுப்பி அதே சமூகத்தை சேர்ந்த பெண் ஷாய்ரா பானு மற்றும் வேறு சிலர் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமந்றம் மத்திய அரசிடம் பதில் கேட்டது.

இதையடுத்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் ஒரு பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், முத்தலாக், பலதார மணம் உள்ளிட்ட நடைமுறைகளை எதிர்ப்பதாக கூறப்பட்டிருந்தது.
இந்திய அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள பாலினச் சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மை, சர்வதேச மரபுகள், முஸ்லிம் நாடுகளின் நடைமுறையில் உள்ள திருமண சட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு கருத்து கூறியிருந்தது.
ஆனால், முத்தலாக் விஷயத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு கோருவது, தங்கள் மதத்தின் சுதந்திரத்தில் தலையிடுவதை போல உள்ளது என அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் விமர்சனம் செய்தது. மேலும், முத்தலாக் விஷயத்தில் திருத்தம் செய்வது, புனித குர்ஆனில் திருத்தம் செய்வதற்கு சமம், என்பதால் அதற்கு வாய்ப்பில்லை என வாதிட்டது. ஜாமியத் உலமா-இ-ஹிந்த் என்ற ஒரு முஸ்லிம் அமைப்பும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், அரசியல் சாசன அமர்வு இந்த விவகாரத்தை விசாரிப்பதே சரியாக இருக்கும் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அரசியல் சாசன அமர்வில் மே 11ம் தேதியிலிருந்து விசாரணை தொடங்கும் என நீதிமன்றம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications