டெல்லி வேற.. புதுச்சேரி வேற.. சுப்ரீம் கோர்ட் விளக்கத்தால் நாராயணசாமிக்கு பின்னடைவு!
Recommended Video
டெல்லி: டெல்லி சூழல் வேறு, புதுச்சேரி விவகாரம் வேறு. இரு யூனியன் பிரதேசங்களும் வேறு வேறு சட்டப் பிரிவுகளுக்கு உட்பட்டவை. எனவே இரண்டையும் ஒன்றாக பார்க்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
டெல்லி மாநில அரசுக்கும் - துணை நிலை ஆளுநருக்கும் இடையிலான பனிப் போரில் நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியது உச்சநீதிமன்றம். டெல்லி அரசை, அமைச்சரவை முடிவுகளை துணை நிலை ஆளுநர் மதிக்க வேண்டும். ஆளுநரிடம் எந்த அனுமதியையும் டெல்லி அரசு பெறத் தேவையில்லை. நிர்வாக ரீதியிலான முடிவுகளை அவருக்குத் தெரிவித்தால் மட்டும் போதும், அனுமதி பெறத் தேவையில்லை என்று கூறி விட்டது உச்சநீதிமன்றம்.
இது நாடு முழுவதும் ஆளுநர்களின் அதிகார வரம்பு குறித்த விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது. குறிப்பாக டெல்லி சூழல் போலவே காணப்படும் புதுச்சேரியில் அரசியல் கட்சியினர் குறிப்பாக ஆளும் கட்சியினர் குஷியாகியுள்ளனர். துணை நிலை ஆளுநர் கிரண் பேடியால் இனி ஆட்டம் போட முடியாது என்று ஆளுங்கட்சியினர் கூறி வருகின்றனர்.
ஆனால் அவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் ஒரு செக் வைத்துள்ளது. டெல்லி வேறு, புதுச்சேரி வேறு. இரண்டையும் ஒன்றாக பார்க்க முடியாது என்று அது கூறியுள்ளது. இது முதல்வர் நாராயணசாமிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
நேற்று கெஜ்ரிவால் அரசு தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் இதுகுறித்து கூறியதாவது: டெல்லியையும், புதுச்சேரியையும் ஒப்பிட முடியாது. புதுச்சேரி முற்றிலும் தனி. அந்த யூனியன் பிரதேசத்தை அந்தமான் நிக்கோபார் தீவுகள், டாமன் டையூ, தாத்ரா நகர் ஹவேலி, லட்சத்தீவு மற்றும் சண்டிகருடனும் கூட ஒப்பிட முடியாது.
டெல்லி நிர்வாகமானது 239ஏஏ பிரிவு சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. அதேசமயம், புதுச்சேரிக்கான சட்டப் பிரிவு 239ஏ ஆகும். எனவே இரண்டும் ஒன்றல்ல. புதுச்சேரி்க்கான சட்டப்பிரிவின் கீழ் நாடாளுமன்றமே ஒரு அமைச்சரவையை உருவாக்கி அரசை நிர்வகிக்க முடியும். சட்டசபையை முறையாக நடத்த நியமன உறுப்பினர்களை நியமிக்க முடியும்.
தற்போது புதுச்சேரி மட்டுமே இந்த சட்டப்பிரிவின் கீழ் வருகிறது. 1971க்கு முன்பு வரை திரிபுரா, இமாச்சல் பிரதேசம், மணிப்பூர், கோவா, டாமன் டையூ ஆகியவை இந்த சட்டப் பிரிவிழ் கீழ் இருந்தன. பின்னர் இவை படிப்படியாக இந்த சட்டத்திலிருந்து விலக்கப்பட்டு விட்டன.
எனவே நாட்டின் பிற யூனியன் பிரதேசங்களுக்கும், புதுச்சேரிக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது. இவற்றை ஒன்றாக பார்க்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர்.
உச்சநீதிமன்றத்தின் இந்தக் கருத்து நாராயணசாமி அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் செயல்பாடுகள் முன்பை விட பல மடங்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.