தலைமை நீதிபதிக்கு எதிரான இம்பீச்மெண்ட் விவகாரம்: சீனியர் நீதிபதிகள் விசாரிக்காதது ஏன்?
தலைமை நீதிபதிக்கு எதிரான இம்பீச்மெண்ட் விவகாரத்தை விசாரிக்கும் அரசியல் சாசன பெஞ்ச்சில் சீனியர் நீதிபதிகள் இடம்பெறவில்லை.
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரும் இம்பீச்மென்ட் தீர்மானத்தை ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு நிராகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன பெஞ்சில் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர் உள்ளிட்டோர் இடம்பெறவில்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகளில் சீனியாரிட்டி அடிப்படையில் 6-வது இடத்தில் இருக்கும் நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையில்தான் இந்த பெஞ்ச் உருவாக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறார் என்பது மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர் உள்ளிட்டோரின் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வகை செய்யும் இம்பீச்மென்ட் தீர்மானத்தை ராஜ்யசபாவில் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் தலைமையில் 70 எம்.பி.க்கள் ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் நோட்டீஸ் அளித்தனர். ஆனால் இந்த இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸை வெங்கையா நாயுடு நிராகரித்தார்.
இதை எதிர்த்து காங்கிரஸ் எம்.பிக்கள் இருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் நியமிக்கப்பட்டுள்ளது.
இதில் நீதிபதிகள் ஏகே சிக்ரி, எஸ்.ஏ. போப்டே. என்.வி. ரமணா, அருண் மிஸ்ரா மற்றும் ஏ.கே. கோயல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால் இந்த அரசியல் சாசன பெஞ்சுக்கு தலைமை வகிக்கும் நீதிபதி ஏ.கே. சிக்ரி, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளில் 6-வது இடத்தில் இருப்பவர்.
ஏகே சிக்ரியைவிட மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர் உள்ளிட்டோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளான நீதிபதி செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகய், எம்.பி. லோகுர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர்தான் தலைமை நீதிபதிக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் கலகக் குரல் எழுப்பியவர்கள்.
இந்த வழக்கை நீதிபதி செல்லமேஸ்வர், எஸ்.கே. கவுல் பெஞ்ச் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞரும் இம்பீச்மென்ட் தீர்மானத்தில் கையெழுத்திட்டவருமான கபில் சிபல் வலியுறுத்தியும் இருந்தார். அப்போது, தலைமை நீதிபதி முன்பு இதைத் தெரிவிக்க நீதிபதி செல்லமேஸ்வர் பெஞ்ச் அவரை கேட்டுக் கொண்டது. மேலும் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், பிரசாந்த் பூஷண் ஆகியோரை நாளை மீண்டும் வாருங்கள் எனவும் செல்லமேஸ்வர் பெஞ்ச் தெரிவித்திருந்தது