அரசு விளம்பரங்களில் ஜெ. படம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: தமிழக அரசு விளம்பரங்களில் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெற்றது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அரசு விளம்பரங்களில் தலைவர்கள் படங்களை பயன்படுத்துவது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு பிறப்பித்த அந்த உத்தரவில், ‘‘மத்திய மற்றும் மாநில அரசு விளம்பரங்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்.மற்றவர்களின் படங்கள் இடம்பெறக் கூடாது'' என கூறியிருந்தனர்.
இதை சீராய்வு செய்யக் கோரி சில மாநில அரசுகள் தாக்கல் செய்த மனுக்கள் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தன. இந்த காலக்கட்டத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி டெல்லி மற்றும் தமிழக அரசு விளம்பரங்களில் முதல்வர்களின் படம் வெளியானது. ஏற்கனவே இதுதொடர்பான வழக்கை தொடர்ந்தவரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் இதுதொடர்பாக ஆதாரங்களுடன் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பினாகி சந்திர கோஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதாடிய பிரசாந்த் பூஷண், ‘‘நீதிமன்றத்தின் உத்தரவு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என்று கூறி விளம்பரங்கள் வெளியானதை ஆதாரத்துடன் விளக்கினார்.
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து டெல்லி மற்றும் தமிழக அரசுகள் 6 வார காலத்தில் பதில் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையே, இந்த விவகாரத்தில் முதன்மை வழக்கான, விளம்பரங்களில் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் படங்கள் இடம்பெற அனுமதி அளிக்கக் கோரும் தமிழகம், கர்நாடகா, அசாம், மேற்கு வங்காளம், உ.பி, ஒடிசா உள்ளிட்ட 7 மாநில அரசுகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களும் இந்த அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிடும்போது, ‘‘மத்திய அரசின் விளம்பரங்களில் பிரதமர் புகைப்படம் இடம்பெறும்போது, மாநில அரசின் விளம்பரங்களில் ஏன் முதல்வர் படம் இடம்பெற கூடாது? மேலும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் படம் இடம்பெறுவதும் அவசியமாகிறது.
அரசுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள தகவல் தொடர்பே அரசின் விளம்பரங்கள் தான். அரசின் நலத்திட்டங்கள் விளம்பரம் வாயிலாக தான் மக்களை சென்றடைகிறது. எனவே அதில் மக்களுக்காக பணியாற்றும் தலைவர்களின் படம் இடம்பெறுவது அவசியம்.
இதுபோன்று புகைப்படங்களை வெளியிட தடை விதிப்பது, தலைவர்களின் புகழை கெடுக்கும் செயலாக அமைந்துவிடும்''என்றார். கர்நாடகா, அசாம், மேற்கு வங்காளம், உ.பி, ஒடிசா உள்ளிட்ட அரசுகள் சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதை தொடர்ந்து மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.