நீதிபதி கங்குலிக்கு எதிரான பலாத்கார புகாருக்கு முகாந்திரம் இருக்கு... பட் 'நோ ஆக்சன்: சுப்ரீம் கோர்ட
சட்ட பயிற்சி மாணவி ஒருவர் கடந்த நவம்பர் 6-ந் தேதி தனது வலைத்தள பக்கத்தில் பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டார். உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவரிடம் தான் பயிற்சி பெற்ற போது, அவர் பாலியல் ரீதியாக தன்னை தொல்லைப்படுத்தியதாகவும், இந்த சம்பவம் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்ததாகவும் எழுதி இருந்தார். சம்பந்தப்பட்ட நீதிபதி தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும் அந்த மாணவி குறிப்பிட்டு இருந்தார்.
இது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தானே முன்வந்து, இதுபற்றி விசாரணை நடத்த நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எல்.டட்டூ, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகிய 3 நீதிபதிகளை கொண்ட குழு ஒன்றை அமைத்தார். அந்த குழு 7 முறை கூடி விசாரணை நடத்தி தனது அறிக்கையை கடந்த நவம்பர் 28-ந் தேதி தலைமை நீதிபதியிடம் வழங்கியது.
இதைத்தொடர்ந்து, பலாத்கார புகாரில் சிக்கியவர் நீதிபதி ஏ.கே.கங்குலி என்ற தகவல் வெளியானது. உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த இவர் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றுவிட்டார். இவர் தற்போது மேற்கு வங்காள மாநில மனித உரிமை ஆணையராக பதவி வகித்து வருகிறார்.
பாலியல் புகாரில் தனது பெயர் வெளியானதும் அதை மறுத்தார் நீதிபதி ஏ.கே.கங்குலி. இந்நிலையில், நீதிபதி ஏ.கே.கங்குலி விரும்பத்தகாத முறையில் நடந்து கொண்டதாக மாணவி கூறிய புகாருக்கு முகாந்திரம் இருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு தெரிவித்து உள்ளது.
இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி பி.சதாசிவம் வெளியிட்டுள்ள அறிக்கை:
விசாரணையின் போது மாணவி எழுத்து பூர்வமாகவும், வாய்மொழியாகவும் தெரிவித்த கருத்துகளையும், அவரது சாட்சியங்களின் பிரமாண வாக்குமூலங்களையும், நீதிபதி ஏ.கே.கங்குலி தெரிவித்த கருத்துகளையும் நாங்கள் கவனத்துடன் ஆய்வு செய்தோம். அதன் மூலம், 24.12.2012-ந் தேதி அன்று நீதிபதி ஏ.கே.கங்குலி தங்கி இருந்த லீ மெரிடியன் ஓட்டலுக்கு அவருக்கு உதவி செய்வதற்காக பெண் வழக்கறிஞர் சென்று உள்ளார். அன்று இரவு 8 மணி முதல் 10.30 மணி வரை அவர் அங்கு இருந்துள்ளார். இந்த உண்மையை விசாரணையின் போது நீதிபதி ஏ.கே.கங்குலி மறுக்கவில்லை என்று நீதிபதிகள் குழு தெரிவித்து உள்ளது.
‘விசாரணையின் போது அந்த பெண் தெரிவித்த கருத்துகளை வைத்து பார்க்கும் போது, நீதிபதி ஏ.கே.கங்குலி விரும்பத்தகாத வகையில் (வாய் வார்த்தை மூலமாகவோ அல்லது வாய் வார்த்தை அல்லாத சைகை மூலமாகவோ) நடந்து கொண்டார் என்ற புகாருக்கு முகாந்திரம் உள்ளது என்றும் கூறி இருக்கிறது.
என்றாலும் மேற்கண்ட சம்பவம் நடப்பதற்கு முன்பே சம்பந்தப்பட்ட நீதிபதி பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். கடந்த 5-ந் தேதி நடந்த முழு நீதிமன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்த பிரச்சினையில் இந்த நீதிமன்றத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்க தேவை இல்லை என்று கருதுகிறோம் என கூறப்பட்டுள்ளது.