முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு இரங்கல் கூட்டம் நடத்தி பள்ளிக்கு 'லீவு' விட்ட முதல்வர்
பலசூர்: ஒடிஷாவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயி இறந்துவிட்டதாகக் கூறி பள்ளிக்கு முதல்வர் விடுப்பு அளித்தது பலரையும் வியக்க வைத்துள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயி அண்மை காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளார். இந்நிலையில்
ஒடிஷா மாநிலம் பலசூர் மாவட்டத்தில் உள்ள துவக்கப் பள்ளி ஒன்றின் முதல்வர் கமலகந்தா தாஸ் மற்றொரு பள்ளியில் நடந்த ஆசிரியர்கள் பயிற்சி முகாமில் கடந்த வெள்ளிக்கிழமை கலந்து கொண்டார்.
அந்த முகாமில் கலந்து கொண்ட ஆசிரியர் ஒருவர் தாஸிடம் வாஜ்பாயி இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து தாஸ் பள்ளிக்கு வந்து வாஜ்பாயி இறந்துவிட்டதாகக் கூறி இரங்கல் கூட்டத்தை நடத்தியுள்ளார். அதன் பிறகு பள்ளிக்கு விடுமுறையும் அளித்தார்.
வழக்கத்திற்கு மாறாக குழந்தைகள் சீக்கிரமே வீட்டிற்கு வந்ததற்கான காரணத்தை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து மாவட்ட கலெக்டர் சனதான் மாலிக்கிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து மாலிக் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தாஸ் சஸ்பெண்ட் செய்யப்படுவார். தேவைப்பட்டால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக ஜார்க்கண்ட் மாநில கல்வித் துறை அமைச்சர் நீரா யாதவ் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உயிரோடு இருக்கையிலேயே அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.