தேசதுரோக வழக்கு சர்ச்சை.. ஜே.என்.யூ.வில் சேர மாணவர்கள் தயக்கம்?
டெல்லி: தேசத்துரோக வழக்குகள் சர்ச்சையால் டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (ஜே.என்.யூ) சேருவதற்காக மாணவர்களின் விண்ணப்பங்கள் கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜே.என்.யூ.வில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு குற்றவாளி அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதற்கு எதிராக நீதி கோரி நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் நாட்டுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக சர்ச்சை வெடித்தது.
இதனைத் தொடர்ந்து ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமார் உள்ளிட்டோர் தேசதுரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் நிகழ்ச்சியை நடத்திய மாணவர்கள் அப்படியான முழக்கம் எழுப்பவில்லை; சில ஊடகங்கள் வேண்டுமென்றே அந்த முழக்கங்களை சேர்த்தது அம்பலமானது.
இதனால் தேசதுரோக குற்றச்சாட்டின் கீழ் சிறையிலடைக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜாமீன் கிடைத்து விடுதலை ஆகினர். இத்தகைய சர்ச்சைகளால் ஜே.என்.யூவில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
2014-ம் ஆண்டில் மொத்தம் 79,000 விண்ணப்பங்கள் வந்திருந்தன. ஆனால் நடப்பாண்டு 72,000 விண்ணப்பங்களே வந்துள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 3,000 விண்ணப்பங்கள் குறைவாக பெறப்பட்டுள்ளன. ஜே.என்.யூ.வில் மொத்தம் 2,700 இடங்களுக்கு 28 மடங்கு விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன.
இருப்பினும் வந்துள்ள விண்ணப்பங்கள் ஜே.என்.யூ.வின் பொதுவான நுழைவுத் தேர்வுக்குரியதுதான்... ஆகையால் இதுபற்றி கவலைப்பட வேண்டியது இல்லை என்கிறது ஒருதரப்பு. ஆனால் தேசதுரோக நடவடிக்கைகள் ஜே.என்.யூவில் நடப்பதாக சர்ச்சை கிளப்பிவிடப்பட்டதாலேயே மாணவர்கள் சேர தயங்குகின்றனர் என்கின்றனர் ஜே.என்.யூ. பேராசிரியர்கள்.