குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனைக்கு தடை.. நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது - சேவாக், கைஃப் வரவேற்பு
டெல்லி: குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளதை கிரிக்கெட் வீரர்கள் சேவாக், முகமது கைஃப் ஆகியோர் வரவேற்று நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் சிங் ஜாதவ் . இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், வேவு பார்த்ததாக அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
மேலும் பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாகவும், பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் பாகிஸ்தான் அரசு அவர் மீது குற்றம்சாட்டியது. இந்நிலையில் குல்பூஷணுக்கு கடந்த மாதம் 10-ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இந்நிலையில் சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா அணுகியது. இந்த வழக்கில் நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.அப்போது குல்பூஷன் ஜாதவுக்கான மரண தண்டைனைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த உத்தரவு இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இந்த தீர்ப்பினை வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து கிரிக்கெட் வீரர் சேவாக் தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 'சத்யவமே ஜெயதே' என அவர் டுவிட் செய்துள்ளார்.
Satyamev Jayate !#KulbhushanJadhav
— Virender Sehwag (@virendersehwag) May 18, 2017
இதேபோல் முகமது கைஃப் தனது டுவிட்டரில், 'இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். சர்வதேச நீதிமன்றத்திற்கு நன்றி. நீதி, நிலைநாட்டப்பட்டுள்ளது' என பதிவு செய்துள்ளார்.
Congratulations India.
— Mohammad Kaif (@MohammadKaif) May 18, 2017
Thanks to the International Court of Justice , justice has prevailed.#KulbhushanJadhav