கங்கை வெள்ளத்தில் நின்று செல்ஃபி எடுத்த 7 பேர் நீரில் மூழ்கி பலி
கான்பூர்: கங்கை ஆற்றில் ஓடும் வெள்ளத்தில் நின்று செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற சென்ற 6 நண்பர்களும் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கலோனல்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சிவம், 19. இவர் கான்பூர் மாவட்டத்தின் ஜூஹி பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான சச்சின் குப்தா ,21, போலு திவாரி 20, ரோஹித்,20, மக்சூத் 31, போலா, 16 சத்யம், 24 ஆகிய 6 பேருடன் நேற்று கங்கை நதியில் குளிக்கச் சென்றார்.
சமீபத்திய மழை காரணமாக நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நதியில் குளித்துக் கொண்டிருந்த சிவம், நீரோட்டம் அதிகமுள்ள பகுதியில் செல்பி எடுக்க முயன்றார். அப்போது அவர் நிலைதடுமாறி விழந்ததில் நீரில் மூழ்கத் தொடங்கினார்.
இதையடுத்து அருகில் இருந்த மக்சூத் அவரை காப்பாற்ற முயன் றார். அவரும் நீரில் மூழ்கவே, நண்பர்கள் அடுத்தடுத்து ஒவ் வொருவராக நீரில் குதித்தனர். இந் நிலையில் 7 பேரும் நீரில் மூழ்கினர்.
தகவலின் பேரில் இளைஞர் களை மீட்க நீர்மூழ்கி வீரர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 2 மணி நேர தேடுதலுக்குப் பிறகு 7 பேரின் உடல்களை அவர்கள் மீட்டனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கான்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷாலாப் மாத்தூர், பலத்த மழை காரணமாக கங்கை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ஆழம் அதிகமாக உள்ள பகுதியில் ஏழு இளைஞர்களும் நதியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சிவம் என்ற இளைஞர் செல்ஃபி எடுத்ததால் கட்டுப்பாட்டை இழந்து, நதியில் தவறி விழுந்தார்.
அதைத் தொடர்ந்து, அவரைக் காப்பாற்றுவதற்காக நதியில் குதித்த மசூத் என்ற இளைஞரும், மற்ற 5 பேரும் ஒருவர் பின் ஒருவராக நதியில் மூழ்கினர். இதையடுத்து, நதியில் மூழ்கிய இளைஞர்களைக் காப்பாற்றுவதற்காக மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் குவிந்தனர்.
இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அவற்றை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றதில், இளைஞர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இவர்களில், சிவம் காலனேல்கஞ்ச் என்ற பகுதியைச் சேர்ந்தவர்; மற்ற ஆறு பேரும் ஜூஹி என்ற பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர் என்று ஷாலாப் மாத்தூர் தெரிவித்தார்.
உலகிலேயே இந்தியாவில்தான் செல்ஃபி மரணங்கள் அதிகரித்து வருகின்றன என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் மும்பையில் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்தது. அரபிக் கடல் அருகே உள்ள பாறையில் நின்று செல்ஃபி எடுத்த மூன்று இளம்பெண்கள் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தனர். அவர்களைக் காப்பாற்றச் சென்ற இளைஞரும் கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.