சேகர் ரெட்டிக்கு கருப்பு பணத்தை மாற்ற உதவிய தொழிலதிபர் கொல்கத்தாவில் கைது
கொல்கத்தா: போயஸ் கார்டனுக்கு நெருக்கமான தொழிலதிபர் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு பணம் மாற்ற உதவி செய்த கொல்கத்தாவை சேர்ந்த தொழிலபதிபர் பரஸ்மால் லோதா அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போயஸ் கார்டன் மற்றும் அமைச்சர்கள் பலருக்கும் நெருக்கமானவர் சேகர் ரெட்டி. வருமான வரித்துறைக்கு கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ131 கோடி ரொக்கம், 178 கிலோ தங்கம் பிடிபட்டது. இதில் ரூ30 கோடிக்கு புதிய ரூ2,000 நோட்டுகள் இருந்தன.
இதனடிப்படையில் சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சேகர் ரெட்டி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற யார் உதவி செய்தது என்ற விசாரணையின்போது, கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் பரஸ்மால் லோதாவை கை காட்டியுள்ளார்.
எனவே அமலாக்கத்துறை பரஸ்மால் லோதாவை இன்று கைது செய்தது. அவர் சுமார் ரூ.25 கோடி மதிப்புக்கு பழைய ரூபாய் நோட்டுக்களை புதிய ரூபாய் நோட்டுக்களாக மாற்ற உதவி செய்திருந்தது அம்பலமாகியுள்ளது.