மகாராஷ்டிரா அரசில் சேருகிறது சிவசேனா: 12 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு?
மும்பை: மகாராஷ்டிரா பாரதிய ஜனதா தலைமையிலான அரசில் சேருவதற்கு சிவசேனா ஒப்புதல் தெரிவித்துள்ளது. சிவசேனாவுக்கு 12 அமைச்சர்கள் கொடுக்க பாரதிய ஜனதாவும் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிராவில் அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பெறாத நிலையிலும் சுயேட்சைகள் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சியில் அமர்ந்துள்ளது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்று உள்ளார்.

சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், பாஜக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக கூறினாலும் பழைய கூட்டணிக் கட்சியான சிவசேனாவின் ஆதரவைப் பெற பாஜக தலைவர்கள் முயற்சித்து வந்தனர். இந்நிலையில் அனில் தேசாய் தலைமையிலான சிவசேனா தலைவர்கள் நேற்று முன்தினம் இரவு முதல்வர் பட்னாவிஸை சந்தித்து கூட்டணி குறித்து இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன்படி சிவசேனாவுக்கு, துணை முதல்வர், உள்துறை அமைச்சர் ஆகிய பதவிகள் தரப்படாது. அதற்கு பதில் பொதுப்பணி, எரிசக்தி, நீர்ப்பாசனம் உள்ளிட்ட இலாகாக்கள் அளிக்கப்படும். நான்கு கேபினட் அமைச்சர்கள், எட்டு துணை அமைச்சர்கள் பதவி சிவசேனாவுக்கு தரப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதை சிவசேனாவும் ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து இன்று சிவசேனா அமைச்சர்கள் பதவி ஏற்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications