மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் பதவிக்கு பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் சிவசேனா
மும்பை: மகாராஷ்டிரா சட்ட சபையின் சபாநாயகர் தேர்தலில் பாஜகவை எதிரத்து போட்டியிட சிவசேனா முடிவு செய்துள்ளது.
மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக ஆட்சியமைத்துள்ளது. சட்டசபை நேற்று கூடியுள்ள நிலையில், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 41 உறுப்பினர்களை தன்வசம் வைத்துள்ள தேசியவாத காங்கிரஸ் பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து ஆட்சியை காப்பாற்றும் என்று தெரிகிறது.
எனவே சிவசேனா தயவை பாஜக இதுவரை கோரவில்லை. பாஜகவின் எதிர்வினையால் அதிர்ச்சியைந்துள்ளது சிவசேனா. இவ்வளவு நாளாக எப்படியும் தங்களை கூட்டணியில் சேர்ப்பார்கள், அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த சிவசேனாவக்கு இப்போது நிதர்சனம் தெரிய ஆரம்பித்துள்ளது. எனவே எதிர்க்கட்சியாக இருப்பதை தவிர சிவசேனாவுக்கு வேறு வழியில்லை.
பாஜகவுக்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் சிவசேனாவுக்கு இயல்பாகவே எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துவிடும். ஆனால் சபாநாயகர் தேர்தலிலும் அக்கட்சி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. கட்சியின் செய்தி தொடர்பாளர் நீலம் கொர்கே இதை தெரிவித்தார்.
சபாநாயகராக பாஜக நிறுத்தும் நபருக்கு எதிராக சிவசேனா ஒரு நபரை போட்டிக்கு நிறுத்த உள்ளது. அவ்வாறு போட்டிக்கு நிறுத்தும்பட்சத்தில் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டிவரும். பொதுவாக சபாநாயகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது மரபு. ஆனால் அறுதி பெரும்பான்மை பெறாத ஒரு கட்சி ஆட்சியமைக்கும்போது சபாநாயகருக்கு தேர்தல் நடைபெறுவதும் வழக்கம்தான்.
இந்த தேர்தலில் சிவசேனா நிறுத்தும் வேட்பாளருக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றின் உறுப்பினர்கள் வாக்களித்தால் சிவசேனாவை சேர்ந்தவரே சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டால், அரசு கொண்டுவரும் சட்டங்களை நிறைவேற்ற விடாமல் செய்ய முடியும். எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச அனுமதித்துவிட்டு ஆளும் கட்சி உறுப்பினர்களை அடக்கி வைக்க முடியும்.
சக்தி வாய்ந்த இந்த பதவிக்கான போட்டியில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று பாஜகவும், சிவசேனாவும் போட்டிபோட உள்ளதால் மகாராஷ்டிர அரசியல் மீண்டும் களை கட்டியுள்ளது.