செல்லாத நோட்டு அறிவிப்பு.. ஜனாதிபதியை சந்திக்க மம்தாவுடன் கைகோர்க்கும் சிவசேனா !
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவு குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து முறையிட எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
டெல்லி: ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் குடியரசுத்தலைவரை சந்திக்கும் குழுவில் சிவசேனாவும் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடி அறிவிப்பை கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனாவும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், சுவிட்சர்லாந்தில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை முதலில் கொண்டு வாருங்கள். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் நாங்கள் உங்களுக்கு ஆதரவாக உள்ளோம். ஆனால் அதை மக்களை கஷ்டப்படுத்தி செய்ய வேண்டாம் என கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார்.
இந்தநிலையில் எதிர்க்கட்சிகள் மோடிக்கு எதிராக ஓரணியில் திரண்டு இன்று தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கடுமையாக விவாதிக்கத் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, மோடியின் அதிரடி நடவடிக்கை குறித்து கடும் கண்டன குரலை எழுப்பி வருகிறார். இதனிடையே ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஒருமித்த குரல் எழுப்ப திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், தி.மு.க உள்ளிட்ட 13 கட்சிகள் ஆலோசனை நடத்தின.
அப்போது இன்று குடியரசுத்தலைவரை சந்திக்க ஆலோசனை வழங்கினார் மம்தா ஆனால் இதை தேசிய மாநாட்டுக்கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் ஆமோதித்தன. ஆனால், இதில் பிற கட்சிகளுக்கு உடன்பாடு இல்லை. இதையடுத்து இன்றும் எதிர்கட்சிகள் கூடி ஆலோசலை நடத்த உள்ளன. ஒருவேளை குடியரசுத்தலைவரை முதலில் சந்திப்பதாக முடிவு எடுக்கப்பட்டால், மம்தா குழுவுடன் சிவசேனாவும் பங்கேற்கும் என அந்த கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில், மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்காக மம்தா பானர்ஜிடன் ஜனாதிபதியை சந்திக்கும் குழுவில் சிவசேனாவும் பங்கேற்கும் என தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.