ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையனுடன் நான் போராடியிருக்க கூடாது.. வங்கி பெண் அதிகாரி ஜோதி
பெங்களூர்: பெங்களூர் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையனுடன் தாம் போராடியிருக்கக் கூடாது என்று பாதிக்கப்பட்ட பெண் வங்கி அதிகாரி ஜோதி தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் ஏ.டி.எம் மையத்தில் கடந்த 19-ந் தேதி பணம் எடுக்க சென்ற வங்கி பெண் அதிகாரியான ஜோதியை, ஒரு மர்மநபர் கொடூரமாக தாக்கி விட்டு பணத்தையும், செல்போனையும் கொள்ளையடித்து சென்றான். கொள்ளையன் தாக்கியதில் தலை, முகத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்தார் ஜோதி. அவர் முதலில் நிமான்ஸ் மருத்துவமனையிலும் பின்னர் கெங்கேரியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
மர்மநபரின் கொடூர தாக்குதலில் ஜோதியின் உடலில் வலதுபுறம் முற்றிலும் செயல் இழந்து போனது. அவரை தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து, அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், 10 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் தனது கணவர், மருத்துவர் ஆகியோரிடம் ஜோதி இயல்பாக பேச தொடங்கினார்.
ஜோதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாலும், அவர் பேச தொடங்கி விட்டதாலும், அவர் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு தனியார் மருத்துவமனை ஏற்பாடு செய்தது. இதனால் நேற்று ஏராளமான பத்திரிகையாளர்கள், தொலைகாட்சி நிருபர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்தார்கள்.
செய்தியாளர்களை சந்தித்த வங்கி பெண் அதிகாரி ஜோதி, நான் உங்களை சந்திப்பதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன். கொள்ளையனை நான் எதிர்த்து போராடி இருக்கக் கூடாது. அவனிடம் நான் பணத்தைக் கொடுத்திருந்தால் என்னை தாக்கியிருக்க மாட்டான். தற்போது நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். கூடிய விரைவில் குணமடைந்து வீட்டிற்கு திரும்ப செல்வதையே விரும்புகிறேன். இதற்கு மேல் வேறு எதுவும் என்னால் தெரிவிக்க இயலாது என்றார்.
அதைத்தொடர்ந்து, ஜோதியை மருத்துவர்கள் அங்கிருந்து அழைத்து சென்று விட்டனர்.