கறுப்பு பண மீட்பு.. டெல்லியில் சிறப்பு புலனாய்வு குழுவின் முதல் கூட்டம்!
டெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கறுப்பு பணத்தை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி பிரபல மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இதன் மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், கறுப்பு பணத்தை மீட்பது தொடர்பான விசாரணையை கண்காணிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை மத்திய அரசு 3 வாரங்களுக்குள் அமைக்கவேண்டும் என்று கடந்த மாத தொடக்கத்தில் உத்தரவிட்டது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பதவி ஏற்ற புதிய அரசு, உச்சநீதிமன்றத்தின் இறுதிக்கெடு முடிவதற்கு ஒரு நாள் முன்னதாகவே சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இந்த சிறப்பு புலனாய்வு குழுவின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.
இக் குழுவின் தலைவரான ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எம்.பி.ஷா கூட்டத்திற்கு தலைமை வகித்தார். இதுதவிர, குழுவின் துணைத் தலைவரும், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான அரிசத் பசாயத் உள்ளிட்ட பல்வேறு இலாகாக்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 11 உயர் அதிகாரிகள் இதில் கொண்டனர்.
இக் கூட்டத்தில், கறுப்பு பண பிரச்சினையை கையாளுவது தொடர்பான கொள்கை முடிவுகள் குறித்தும், இது தொடர்பாக தற்போது நடந்து வரும் விசாரணைகள் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவு எடுக்கப்படும்.