ராமேஸ்வரம் அருகே கடல்பாசி எடுக்கச் சென்ற பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவு: மக்கள் போராட்டம்
கடற்பாசி சேகரிக்கச் சென்ற மீனவப் பெண்ணை வடமாநில இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பின் எரித்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், விரைவான நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள வடகாடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வடகாடு கடல் பகுதியில் கடற்பாசி சேகரிக்கும் தொழில் செய்து வருகிறார்.
செவ்வாய் கிழமை காலை வழக்கம் போல் கடல் பாசி எடுக்க சென்ற அவர், மாலை வரை வீடு திரும்பாததால் அச்சம் அடைந்த அவரது உறவினர்கள் வடகாடு கடல் பகுதியில் இரவு வரை தேடியுள்ளனர். ஆனால், தகவல் எதுவும் கிடைக்காததால் அவரது கணவர் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து வடகாடு பகுதிக்கு சென்ற நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சதீஷ் மாயமான காணாமல்போன பெண்ணை தேடி செல்லும் போது வடகாடு காட்டு பகுதியில் அப்பெண் உயிரிழந்த நிலையில் அரைநிர்வாணமாக கிடந்ததைக் கண்டுள்ளார்.
- பாலியல் துன்புறுத்தல் பற்றி பெண்கள் சமூக ஊடகங்களில் எழுதுவது தீர்வாகுமா?
- இந்தியாவின் திருமணங்களில் ஆபாச படங்களின் தாக்கம் என்ன?
- என்கவுன்டர் கொலைகளை சமூகம் கொண்டாடுவது ஏன்?
ஊர்மக்கள் ஆவேசம்
இதையடுத்து, அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் இறால் பண்ணையில் வேலை செய்யும் வடமாநில இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர் என்கிறது காவல்துறை.
இந்த நிலையில், போலீசாருடன் சென்ற ஊர் மக்கள் ஆத்திரம் அடைந்து இறால் பண்ணையை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். மேலும் இறால் பண்ணையில் பணிபுரிந்த ஆறு வடமாநில இளைஞர்கள் மீதும் ஊர் பொதுமக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தி அவர்களை ஓர் அறையில் வைத்து பூட்டினர்.
இது குறித்து விசாரணைக்கு சென்ற போலீசார் அளித்த தகவலின் பெயரில் நகர் காவல் நிலையத்தில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர்.
ஆனால், உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உடலை எடுக்க விடமாட்டோம் என்று கூறி போலீசாரை முற்றுகையிட்டு ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் சந்திராவின் உடலை எடுக்க அனுமதித்தனர்.
இதனையடுத்து உடற்கூராய்விற்காக, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கிராம மக்களால் தாக்கப்பட்டு, அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த வடமாநில இளைஞர்களை மீட்டு, ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணை சொல்வது என்ன?
உயிரிழந்த பெண் செவ்வாய் கிழமை காலை கடல் பாசி சேகரிக்க சென்ற போது வடகாடு காட்டு பகுதியில் வைத்து, இறால் பண்ணையில் வேலை செய்யும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கஞ்சா போதையில் அவரை வழிமறித்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது.
பின் அப்பெண்ணின் கழுத்தை சேலையால் நெரித்துக் கொலை செய்துவிட்டு, அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக முகத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
முதல் கட்ட மருத்துவ பரிசோதனையில் இறந்த பெண்ணை மூன்று இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் கிராம மக்களால் பிடித்து வைக்கப்பட்ட ஆறு இளைஞர்களில், வல்லுறவு செய்த அந்த மூன்று பேர் யார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. மேலும் வட மாநில இளைஞர்கள் பொதுமக்கள் தாக்கியதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் காவல்துறையினரால் இளைஞர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்த முடியவில்லை.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த ராமேஸ்வரம் நகர் காவல் துறையினர் ஆறு வடமாநில இளைஞர்கள் கைது செய்து மருத்துவ சிகிச்சைக்கு பின் அவரிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த வழக்கில் குற்றமிழைத்தவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் வடகாடு பகுதியில் இயங்கிவரும் இறால் பண்ணைகளை மூட வலியுறுத்தியும் வடகாடு கிராம மக்கள் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்