ராஜஸ்தான்: ஆளும் காங். அரசுக்கு எதிராக கட்சி தாவி வந்த பகுஜன்சமாஜ் எம்.எல்.ஏக்களும் போர்க்கொடி!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக காங்கிரஸுக்கு கட்சி தாவி வந்த பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்களும் போர்க்கொடி தூக்கி உள்ளதால் பரபரப்பான சூழ்நிலை நீடிக்கிறது.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கலகக் குரல் எழுப்பினார். அவருக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏக்களும் துணை நின்றனர்.
ராஜஸ்தானில் ஜூன் 8-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.. முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு!
டெல்லி சமாதான பேச்சுவார்த்தை
இந்த 18 எம்.எல்.ஏக்களுடன் டெல்லி ஹோட்டலில் முகாமிட்டார் சச்சின் பைலட். இதனையடுத்து சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீண்ட இழுபறிக்கு சமாதானப்படுத்தியது காங்கிரஸ் மேலிடம். இதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரது பங்களிப்பும் முக்கியமானதாக இருந்தது.
பகுஜன்சமாஜ் எம்.எல்.ஏக்களுக்கு வலை
அப்போது சச்சின் பைலட்டை எதிர்கொள்ள பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து 6 எம்.எல்.ஏக்களை காங்கிரஸுக்கு கொண்டு வந்தார் அசோக் கெலாட். அப்படி வந்த எம்.எல்.ஏக்களுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் பதவிகள் வழங்கப்படும் என உறுதி அளித்தது. ஆனால் கடந்த ஒரு ஆண்டாக சச்சின் பைலட் தரப்புக்கும் சரி, கட்சி தாவி வந்த பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்களும் சரி எந்த ஒரு பதவியும் வழங்கவில்லை. அமைச்சரவையிலும் இடம்தரவில்லை.
மீண்டும் போர்க்கொடி
இதனால் பொறுமை இழந்த சச்சின் பைலட் அணி மீண்டும் போர்க்கொடி தூக்கி இருக்கிறது. தற்போது வேறுவழியே இல்லாமல் ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவும் இருக்கிறது. இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் 5 அல்லது 6 பேர் இடம்பெறக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
சீறும் கட்சி தாவிய எம்.எல்.ஏக்கள்
இதையடுத்து கட்சி தாவி வந்த பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் தங்களுக்கும் பதவி கேட்க தொடங்க உள்ளனர். இது தொடர்பாக கட்சி தாவி வந்த ராஜேந்திர குடா எம்.எல்.ஏ கூறுகையில், நாங்கள் மட்டும் கடந்த ஆண்டு ஆதரவு தராமல் போயிருந்தால் கெலாட் அரசு இறந்து போய் இன்றுடன் ஓராண்டாகி இருக்கும் என்பதை கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும். இதை ஏன் காங்கிரஸ் மேலிடம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறது என கொந்தளித்தார்.
கெலாட் அரசு கவிழுமோ?
இப்போதைய நிலையில் சச்சின் பைலட் கோஷ்டியையும் சமாளிக்க வேண்டும்; கட்சி தாவி வந்த பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்களையும் சமாளித்தாக வேண்டும் என்கிற இடியாப்ப சிக்கலில் சிக்கி இருக்கிறது ராஜஸ்தான் கெலாட் அரசு. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் விரைவாக முடிவெடுத்தால் மட்டுமே ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை காப்பாற்ற முடியும் என்கிற நிலைமை உள்ளது. இந்த திருப்பங்களால் ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு நீடிக்கிறது.