நாடாளுமன்றத்தில் கண்கள் கலங்க அனல் பறக்க தீயா பேசிய அமைச்சர் ஸ்மிருதி இரானி
டெல்லி: ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலை குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ராஜ்யசபாவில் கண்கள் கலங்க அனல் பறக்க பேசினார்.
ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை குறித்து ராஜ்யசபாவில் பகுஜன் சமாஜ் கட்சியினர் விவாதம் செய்தனர். அப்போது பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதிக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அந்த விவாதத்தின்போது ஸ்மிருதி இரானி கூறுகையில்,
ராகுல் காந்தி
ரோஹித் வெமுலாவின் உடலை அரசியல் ஆயுதமாக பயன்படுத்திவிட்டார்கள். வெமுலாவின் மரணத்தை வைத்து ராகுல் காந்தி அரசியல் ஆதாயம் தேடினார். தெலுங்கானா தனிமாநில பிரச்சனை எழுந்தபோது சுமார் 600 மாணவர்கள் இறந்தனர். அப்பொழுது ராகுல் காந்தி ஒரு முறையாவது அங்கு சென்றாரா? இல்லையே.
கடிதங்கள்
நான் பல்கலைக்கழகங்களுக்கு கடிதம் எழுத எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தங்களின் பிள்ளைகளுக்கு அட்மிஷன் கேட்டு எம்.பி.க்கள் என்னிடம் வருகிறார்கள். கடிதம் எழுதுவது என் கடமை என்பதால் அதற்காக நான் எப்பொழுதும் மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் அமைச்சராக பதவியேற்ற 20 மாதங்களில் பாரபட்சம் இன்றி பணியாற்றுகிறேன்.
மாணவர்
ஒரு மாணவர் இறந்தால் அதை வைத்து அரசியலில் போரே நடக்கிறது. ரோஹித் வெமுலாவை சஸ்பெண்ட் செய்த முடிவை எடுத்த குழு தேசிய ஜனநாயக கூட்டணியால் அல்ல மாறாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அமைக்கப்பட்டது.
அரசியல் ஆதாயம்
ரோஹித் வெமுலாவின் மரணம் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. வெமுலா தற்கொலை செய்தது குறித்து அறிந்து சட்டம் ஒழுங்கை சீரமைக்குமாறு கோர நான் தெலுங்கானா முதல்வருக்கு போன் செய்தேன். ஆனால் அவர் போனை எடுக்கவும் இல்லை இதுவரை எனக்கு பதிலுக்கு போன் செய்யவும் இல்லை.
மருத்துவர்கள்
ரோஹித் அருகே செல்ல மருத்துவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவரை காப்பாற்ற முயற்சி செய்யப்படவில்லை. அவரை அரசியல் ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டனர் என்று தெலுங்கானா போலீசார் தெரிவித்துள்ளனர்.(ரோஹித் பற்றி பேசுகையில் ஸ்மிருதியின் கண்ணில் கண்ணீர் வந்தது)
எதிர்கட்சி
எதிர்கட்சிகள் நான் கூறுவதை கேட்கத் தயாராக இல்லை. அவர்கள் அரசியல் செய்வதிலேயே குறியாக உள்ளனர்.
ராஜினாமா
எனது தேசப்பற்றை இழிவுபடுத்தாதீர்கள். நான் காவிகளுக்கு ஆதரவாக நடக்கிறேன் என்று பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நிரூபித்தால் உடனே எனது பதவியை ராஜினமா செய்வேன்.
கன்யா குமார்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக அதிகாரிகள் மாணவர் சங்க தலைவர் கன்யா குமார், டெல்லி மாணவர் சங்க உறுப்பினர் உமர் காலித் ஆகியோரை சஸ்பெண்ட் செய்யுமாறு பரிந்துரை செய்துள்ளனர்.
உமர் காலித்
உமர் காலித் கவிதை வாசிப்பு நிகழ்ச்சி நடத்துவதாக விண்ணப்பித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகத்தை ஏமாற்றியுள்ளார்.
இந்திரா காந்தி
இந்திரா காந்தி கூட பதவியை இழந்தார். ஆனால் அவரது மகன் தேசத்திற்கு எதிரான சக்திகளை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. கல்வியை அரசியல் போர்க்களமாக ஆக்க வேண்டாம். குழந்தைகளை வாக்கு வங்கியாக பார்க்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.