ஆணாய் மாறிய பெண்கள்... அம்மாவைப் பிழைக்க வைத்த குழந்தை- 2015ஆம் ஆண்டின் மருத்துவ வினோதங்கள்!
டெல்லி: கடந்து போக இருக்கின்ற 2015 ஆம் ஆண்டில் மருத்துவ துறையில் மனிதர்களால் கணிக்க முடியாத பல அரிய நிகழ்வுகளும் இடம் பிடித்துள்ளன.
மாறிய பருவ நிலை, அளவு கடந்த வன்முறை, தாக்குதல்கள், இயற்கை சீற்றங்கள் என உலகையே புரட்டிப் போட்டுவிட்டு கடந்து செல்கிறது இந்த 2015ஆம் ஆண்டு.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் மருத்துவ துறையிலும் நடந்த சில வியத்தகு சம்பவங்கள், பிறப்புகள் குறித்த சில சம்பவங்களின் தொகுப்பே இங்கு இடம்பிடித்துள்ளது.
2015ஆ ம் ஆண்டின் அதிசய குழந்தை:
ஜாக்சன் எம்மெட் பவுல் என்னும் அந்த அதிசயக் குழந்தையின் நிலைமையை வயிற்றிலேயே கண்டறிந்த மருத்துவர்கள் அக்குழந்தையை அழிக்கச் சொல்லியுள்ளனர். எனினும், அவருடைய தாயார் அதற்கு மறுத்துவிட்டார். தலையில் முக்கால் வாசி மூளையையும், மண்டையோட்டுப் பகுதியையும் இழந்த "அனென்செபாலி" நிலையில் பிறந்த ஜாக்சன் மருத்துவத் துறையே வியக்கும் வகையில் தனது முதல் பிறந்தநாளையும் கொண்டாடி உள்ளான்.
குணப்படுத்தவே முடியாத நோய்:
12 வயதான கேட்லின் த்ரான்லேவிற்கு ஒருநாளைக்கு 12,000 முறை தும்மல் வரும். அதாவது சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 20 முறை தும்மல் வரும். அவர் தூங்கும் போது மட்டுமே தும்மலை மறந்து தூங்குவார். இதனை குணப்படுத்தவே வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆணாய் மாறும் பெண்கள்:
ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில் மிகவும் பின் தங்கிய ஒரு கிராமத்தில் இந்த அதிசய நிகழ்வு நடக்கிறது. அங்கு பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒரு சிறுமி பனிரெண்டு வயதில் ஆணாக மாறுகிறாள். அதாவது பனிரெண்டு வயது தொடங்கும் போது சிறுமியாக இருக்கும் பெண் சிறுவனாகிறான். இது குறித்து உயிரியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பிறப்பின் பந்தம்:
கரோலினாவைச் சேர்ந்த ஷெல்லி என்ற 23 வயது பெண்ணிற்கு சிசேரியன் செய்து குழந்தை பிறந்தது. ஆனால், அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட ரத்தக் கட்டால் அவர் திரும்ப இயலாத கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் அவரது குழந்தை ரெய்லான் ஹவ்லே அவரை விட்டு பிரியாமல் அழுதது. குழந்தையின் அழுகையைக் கேட்ட அந்த தாய் உயிர் பிரியும் நிலைக்குச் சென்று உயிர் பிழைத்த சம்பவம் மருத்துவ துறையையே ஆச்சரியப்பட வைத்தது.