விறுவிறுப்படையும் ஜனாதிபதி தேர்தல்... ஜூன் 15ல் பாஜக வேட்பாளர் அறிவிப்பு?
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜூன் 15ம் தேதி அறிவிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான பாரதிய ஜனதா வேட்பாளர் வருகிற 15ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் 13வது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக ஜூலை 17ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வேட்பாளரை தேர்வு செய்யும் பணிகளை பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் தொடங்கியுள்ளன.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். ஜூன் 15ம் தேதி நடைபெறும் பாஜக மத்திய நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்து இறுதியாக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது, இதற்கென பிரத்யேக அறை தொடங்கி ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அமித்ஷா 5 முக்கியத் தலைவர்கள் அடங்கிய குழுவை நியமித்துள்ளார், அவர்களுடன் நாள்தோறும் ஜனாதிபதி தேர்தல் குறித்து அன்றாடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
திரௌபதி, சுமித்ரா மகாஜன், என ஆர்எஸ்எஸ் அபிமானிகளின் பெயர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் பரிசீலனையில் உள்ளன. இதில் முக்கியமாக ஜார்க்கண்ட் ஆளுனர் திரௌபதி முர்முவிற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. பாஜக வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன் காங்கிரஸ் கட்சியும் பொதுவேட்பாளரை அறிவிக்கும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.