இடைத்தேர்தல் எதிரொலி.. யாத்திரைக்கு நடுவில் தேர்தல் பிரச்சாரம்.. இமாச்சல் செல்லும் ராகுல் காந்தி?
சிம்லா: இந்திய ஒற்றுமை யாத்திரையில் பயணித்து வரும் ராகுல் காந்தி, இமாச்சலப் பிரதேசத் தேர்தலுக்காக ஒருநாள் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இமாச்சலப் பிரதேச சட்டசபையின் பதவிக்காலம் வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதியுடன் முடிவடைகிறது. 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால் இமாச்சலப் பிரதேச தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. அங்கு பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அதேபோல், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
'குஜராத் தேர்தல்' பாஜகவின் இரட்டை என்ஜின் வஞ்சகத்தில் இருந்து மக்களை காப்பாற்றுவோம்.. ராகுல் பரபர!
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
குறிப்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, மகளிருக்கு மாதம் ரூ.1,500 உரிமைத் தொகை, இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகல் மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இருப்பினும் ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவாரா என்ற கேள்வி எழுந்தது.
இமாச்சலில் ராகுல் பிரச்சாரம்
இந்த நிலையில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்து ஒருநாள் மட்டும் வெளியேறி, இமாச்சலப் பிரதேசத் தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாஜக சார்பாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் பிரச்சாரத்தை முடித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தியை கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்துள்ளனர்.
இடைத்தேர்தல் எதிரொலி
இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக நாளை ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 6 மாநிலங்களில் நடைபெற்ற 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி பின்னடைவையே சந்தித்தது. இதனால் தேர்தல் களத்தில் ராகுல் காந்தி வருவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் யாத்திரை
இதனிடையே இந்திய ஒற்றுமை யாத்திரை 61வது நாளான இன்று, தெலுங்கானா மாநிலம் காமரெட்டியில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் மாவட்டத்தில் உள்ள தெக்லுர் பகுதிக்குள் அடிஎடுத்து வைக்க உள்ளது. இன்று இரவு 9 மணிக்கு யாத்திரை மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்று இரவில் ஓய்வெடுக்கும் ராகுல் காந்தி, நாளை முதல் இமாச்சலப் பிரதேசம் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாம் முறை
ஏற்கனவே காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையில் இருந்து வெளியேறினார். தற்போது இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக மீண்டும் ஒருநாள் மட்டும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் இருந்து வெளி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.