ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் தாக்கலாகும் நிலையில் ரணில் விக்ரமசிங்கே இன்று இந்தியா வருகை!
டெல்லி: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இதையடுத்து, அந்நாட்டுச் சிறையில் உள்ள 16 தமிழக மீனவர்களை விடுதலை செய்வதாக இலங்கை அரசு அறிவித்தது.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கூட்டணி 106 இடங்களையும், சிறீசேனா தலைமையிலான கூட்டணி 95 இடங்களையும் கைப்பற்றின. அதற்கு அடுத்தபடியாக, இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தது.
அந்நாட்டின் பிரதமர் பொறுப்புக்கு நான்காவது முறையாக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வர ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டார்.
அதன்படி, இன்று டெல்லி வரும் அவர், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரைச் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் இன அழிப்புக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டுவரப்படும் தீர்மானத்தின்போது, இலங்கை பக்கம், இந்தியா நிற்க வேண்டும் என்று மோடியிடம், ரணில் வலியுறுத்தவே அவர் தற்போது டெல்லி வருவதாக மனித உரிமை ஆர்வலர்களும், தமிழ் அமைப்புகளும் குற்றம்சாட்டிவருகின்றன.
ரணில் விக்ரமசிங்கேவின் இந்த சுற்றுப் பயணத்தின்போது, விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இந்தியாவுடன் மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகவும், இதனால் இலங்கையின் நலன் பாதிக்கப்படும் எனவும் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
தமிழக கடல் பகுதிக்குள் மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம், கோட்டைப்பட்டினம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 16 மீனவர்களை, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி கடந்த 1ம் தேதி, இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் சென்ற படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், இலங்கை பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கைது செய்யப்பட்ட மீனவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களை விடுவிக்குமாறு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மீனவ அமைப்புகள் இலங்கை அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தன.
இதையடுத்து, நல்லெண்ண நடவடிக்கையாக அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மார்ச் மாதம் இலங்கை சென்றபோது நல்லெண்ண நடவடிக்கையாக அந்நாட்டுச் சிறையில் இருந்த 86 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதே மாதத்தில் மேலும் 54 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.