தமிழக மீனவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை: டெல்லியில் இலங்கை அமைச்சர் அறிவிப்பு!
டெல்லி: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.
இந்திய - இலங்கை கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் கொதிப்படைந்துள்ள மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து டெல்லி வந்த இலங்கை அமைச்சர் ரஜித சேனரத்ன, மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவாரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது மன்னார் வளைகுடாவில் மீன் பிடிப்பதில் நிலவும் எல்லைப் பிரச்னை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
மேலும் தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் சென்னையில் வரும் 20ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அமைச்சர் ராஜித சேனரத்ன, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படுவர் என்றார்.