தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்- சு.சுவாமி வலியுறுத்தல்
டெல்லி: தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனிநீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
ஜாமீன் கோரி அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை வரும் 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை அடுத்து அங்கு மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் இழிவானது மற்றும் வெட்கக்கேடானது. மோடி அரசு தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். அதன்பிறகு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
வன்முறையில் ஈடுபடுபவர்கள் மற்றும் தேசவிரோத சக்திகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சு.சுவாமி வலியுறுத்தியுள்ளார்.