தொந்தரவு செய்த ஆவிகள்.. பலியான காதல் ஜோடிகளின்.. சிலைகளுக்கு திருமணம்.. வாட்? இப்படி ஒரு சம்பவமா!
காந்திநகர்: உயிருடன் இருக்கும் போது காதல் ஜோடிகளை பிரித்த உறவினர்கள், அவர்கள் இறந்த பிறகு அவர்களின் சிலைகளுக்கு திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.
நிறைவேறாத ஆசையில் இறந்த காதல் ஜோடிகளின் ஆத்மாக்கள் தொடர்ந்து பல வகைகளில் தொந்தரவு கொடுத்து வந்ததால், உயிர் பயத்தில் இந்த சடங்கை செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏதோ உண்மையான திருமணம் செய்து வைப்பதை போல இரு வீட்டாரின் உறவினர்களையும் அழைத்து பிரம்மாண்டமாக அவர்கள் இந்த திருமணத்தை செய்து வைத்திருக்கிறார்கள்.
கேட்டீங்களா? 1 வருடத்தில் சல்லி சல்லியான டிவிட்டர் வருவாய்.. கொத்து கொத்தாக வெளியேறும் ஊழியர்கள்
இளம் காதல் ஜோடி
குஜராத் மாநிலம் டாப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (25). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ராஞ்சனா (22) என்ற பெண்ணும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். தனக்கு நல்ல வேலை கிடைத்த பிறகு, நமது காதல் குறித்து வீட்டில் சொல்லலாம் என ராஞ்சனாவிடம் கணேஷ் கூறி வந்துள்ளார். அதன்படியே, இன்ஜினியரான கணேஷுக்கு ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.
காதலுக்கு எதிர்ப்பு
அதன் பிறகு, இருவரும் தங்களின் காதல் விவகாரம் குறித்து வீட்டில் கூறியுள்ளனர். அவ்வளவுதான். இரு வீட்டாருமே இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்தனைக்கும் அவர்கள் தூரத்து உறவினர்கள்தான். ஆனால், இரு குடும்பங்கள் இடையே பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பகையை காரணம் காட்டி அவர்கள் காதலுக்கு உறவினர்கள் தடை போட்டனர். மேலும், தங்கள் பேச்சை மீறி திருமணம் செய்து கொண்டால் கொலை செய்துவிடுவோம் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
நிறைவேறாத ஆசையில் தற்கொலை
இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிப்பதால், தாங்கள் திருமணம் செய்து கொள்வது முடியாத காரியம் என உணர்ந்த கணேஷும், ராஞ்சனாவும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஊருக்கு வெளியே உள்ள ஒரு மரத்தில் ஒன்றாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்கள். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், காதல் தோல்வியால் அவர்கள் தற்கொலை செய்துகொண்டது உறுதியானது.
ஆவிகள் தொந்தரவு
கணேஷும், ராஞ்சனாவும் தற்கொலை செய்து கொண்ட பிறகு, இரு வீட்டாரும் ஒரு மாதத்திற்கும் மேலாக அழுது புலம்பி வந்தனர். பின்னர் நடந்தது நடந்துவிட்டது என எண்ணி அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். ஆனால் அதற்கு பிறகுதான் ஆட்டமே தொடங்கியுள்ளது. கணேஷ், ராஞ்சனா வீட்டில் அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்ந்தன. பெரும் தொழில் நஷ்டமும் ஏற்பட்டது. மேலும், அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கனவுகளிலும் கணேஷ், ராஞ்சனாவின் ஆவிகள் வந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சிலைகளுக்கு திருமணம்
இந்நிலையில், ஆவிகளின் சேட்டையால் பயந்து போன இருவீட்டாரும் உடனடியாக ஜோதிடர்களை பார்த்துள்ளனர். அப்போது அனைத்து ஜோதிடர்களும் சொல்லி வைத்தது போல, தற்கொலை செய்து கொண்ட இளம் ஜோடிகள் நிராசையால் உயிரிழந்திருப்பதாகவும், அவர்களை சிலைகளாக வடித்து திருமணம் செய்து வைத்து விடுமாறும் கூறியுள்ளனர். அதன்படியே, கடந்த வாரம் இரு வீட்டாரும் சேர்ந்து உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து, கணேஷ் - ராஞ்சனா ஜோடிகளின் கல் சிலைகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்தனர்.