கருணாநிதி பேரன், அழகிரி மகன், ஒய்எஸ்ஆர் ரெட்டியின் மருமகன்.. புருடா மன்னன் சுகேஷ்!
இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கிய புள்ளிகளின் உறவினர் என்று கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர் ஆவார்.
டெல்லி: தேர்தல் ஆணையத்தில் செல்வாக்கு இருப்பதாக கூறி டிடிவி தினகரனிடம் லஞ்சம் பெற்ற சுகேஷ், கடந்த 2011-இல் கருணாநிதியின் பேரன் என்று கூறி ஏமாற்றிய விவகாரம் மறக்க முடியாதது.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வரும் வேளையில், தனக்கு அந்த ஆணையத்திடம் செல்வாக்கு இருப்பதாக கூறி டிடிவி தினகரனிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாக சுகேஷ் சந்திரசேகர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் முன்பணமாக ரூ.1.30 கோடியை பெற்றதாக சுகேஷ் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரை எட்டு நாள் காவலில் வைத்து விசாரித்து வருகிறது போலீஸ்.

இடைத்தரகருக்கே ஒரு தரகர்
டிடிவி தினகரனையும், சுகேஷ் சந்திரசேகரையும் இணைதது இன்னொரு புரோக்கர் எனத் தெரிய வந்துள்ளது. அவரும் பெங்களூருதான். அவரைப் பிடிக்க டெல்லி போலீஸ் படை பெங்களூரில் முகாமிட்டுள்ளது.

யார் இந்த சுகேஷ் சந்திரா?
சுகேஷ் சந்திரசேகர் மிகப்பெரிய மோசடி மன்னன். கடந்த 2008-ல் சுகேஷ் தன்னை கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் என்று கூறிக் கொண்டு பெங்களூரில் பலரிடம் பணம் மோசடி செய்துவிட்டு ஆந்திர மாநிலத்துக்கு தப்பினார். குமாராசாமியின் மகன் நிகில் கௌடாவின் நெருங்கிய நண்பர் என கூறிக் கொண்டு பெங்களூரில் தொழிலதிபரை ஏமாற்றினார்.

அழகிரி மகன்
கடந்த 2009-ஆம் ஆண்டு ஹைதராபாத் சென்ற சுகேஷ், அங்கு அப்போது முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மருமகன் என்று அடையாளப்படுத்திக் கொண்டார். அதை வைத்து பலரிடம் மோசடி செய்துள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழத்திற்கு வந்த சுகேஷ் தன்னை கருணாநிதியின் பேரன் என்றும் அழகிரியின் மகன் என்றும் கூறிக் கொண்டு ஒரு தொழிலதிபரை ஏமாற்றினார். பின்னர் இந்த வழக்கில் சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

யாருக்கு சந்தேகம் வரவில்லை
இதுபோல் மாநிலத்தின் பெரும் புள்ளிகளின் உறவினர் என்று கூறி பல்வேறு மோசடிகளை புரிந்துள்ளார். விலை மதிப்புள்ள ஆடைகள், உயர்ரக கார்கள், பிராண்டட் வாட்சுகள் ஆகியவற்றால் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வண்ணம் தன் காரியத்தை கச்சிதமாக முடித்தார். சுழல் விளக்குகளையும், தமிழகம் மற்றும் கர்நாடக அரசின் சின்னங்களையும் காரில் பொருத்தி வலம் வந்தார்.

2011-இல் சிறை
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2011-இல் சொகுசு கார்களை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக ஏராளமானோரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையில் தலைமறைவாக இருந்த அவரை கப்பன் பார்க் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். எனினும் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் அதன் பின்னர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சுகேஷ் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன.

காதலி கைது
அதன் பின்னர் டெல்லி வந்த அவர், பல்வேறு முறைகேடுகளை செய்தார். கடந்த 2013-ஆம் ஆண்டு தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். பின்னர் அவர் பதுங்கியிருந்த இடம் குறித்து தகவலறிந்த போலீஸார் அவரை நூலிழையில் தவறவிட்டனர். ஆயினும் அந்த பெண்ணை மட்டும் கைது செய்தனர்.

10-ஆம் வகுப்பு
வெறும் 10-ஆம் வகுப்பு மட்டுமே படித்து பெரிய விவிஐபியாக தன்னை காட்டிக் கொள்ள சபாரி சூட்டுகள், ஆயுதம் ஏந்திய தனியார் பாதுகாப்பு படையினருடனேயே வலம் வந்தார். ஹைதராபாதில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் தங்கியிருந்த குடியிருப்பின் மாத வாடகை ரூ.2.5 லட்சமாகும். இத்தனை கெத்துகளை காட்டி பெரிய தலைகளை பிடித்து மோசடியில் ஈடுபட்ட சுகேஷ் தற்போது டிடிவி தினகரனிடம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications