பாதுகாப்பு அனுமதி வழங்க முடியாது- உள்துறை திட்டவட்டம்- சன் டிவியின் பங்குகள் 5% சரிவு!!
மும்பை: சன் குழுமத்தின் 33 சேனல்களுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்க உள்துறை அமைச்சகம் உறுதியாக மறுத்துவிட்டதாக வெளியான தகவலை அடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் இன்று 5 சதவிகிதம் சரிவடைந்து விட்டதாக மும்பை பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கலாநிதிமாறனுக்குச் சொந்தமாக சன் தொலைக்காட்சியின் 33 சேனல்களுக்குகு பாதுகாப்பு அனுமதி வழங்க இயலாது என உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக கூறியதாக செய்திகள் வெளியாகின.
மேலும் சன் குழுமத்தின் உரிமையாளர்களான மாறன் சகோதரர்கள் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அக்குழுமத்தின் 33 தொலைக்காட்சி சேனல்களுக்கு, பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், உள்துறை அமைச்சகத்தின் இநத முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்கும் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கும் விஷயத்தில், உள்துறை அமைச்சகம் புதிய நடைமுறைகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
குறிப்பாக தொலைக்காட்சி சேனல் தொடங்கும் நிறுவனங்கள், தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகள், நிதி முறைகேடு, தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளிட்ட புகார்கள் எதுவும் இல்லை என சுய விளக்க அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என விதிமுறை கொண்டு வர உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் திங்கட்கிழமையன்று காலையில் பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் சன்டிவியின் பங்குகள் 5.52 சதவிகிதம் சரிவடைந்தது
பொதுவாக வாரத்தின் தொடக்க நாளான இன்று இந்தியப் பங்குச்சந்தைதகள் கடும் சரிவுடன் தொடங்கின. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மள மளவென சரிந்து 27,322.5 புள்ளிகள் ஆக வர்த்தகம் இருந்தது. வெள்ளிக்கிழமை ரூ.279.40 ஆக இருந்த சன்டிவியின் பங்குகள் காலையில் வர்த்தக துவக்கத்திலே 5.52 சதவிகிதமாக இருந்தது.
கடந்த ஜூன் 8ந் தேதி சன் நெட்வொர்க் குழுமத்தின் 33 சேனல்கள் மீதான பாதுகாப்பு அனுமதியை அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளதாகவும், இதனால் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இக்குழுமம் தனது சேனல்களின் ஒளிபரப்பை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானபோது சன்டிவி நிறுவனத்தின் பங்குகள் சுமார் 22 சதவிகிதம் சரிந்தது குறிப்பிடத்தக்கது.