மாலத்தீவில் வரும் நவம்பர் 3ம் தேதிக்குள் மறுதேர்தல் நடத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
மாலே: மாலத்தீவில் கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தல் செல்லாது எனவும், வரும் நவம்பர் 3ம் தேதிக்குள் மறுதேர்தல் நடத்த வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடான மாலத்தீவில், கடந்த 30 ஆண்டுகளாக மமூன் அப்துல் கயூம் என்பவரே அதிபராக இருந்து வந்தார். அதன்பிறகு, கடந்த 2008-ம் ஆண்டு பல கட்சிகள் பங்கேற்ற முதலாவது ஜனநாயக தேர்தல் நடைபெற்றது.
அந்தத் தேர்தலில், மாலத்தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் முகமது நஷீத் வெற்றி பெற்று அதிபரானார். கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் அதிபராக இருந்த நஷீத், கடந்தாண்டு பிப்ரவரியில் நடந்த ராணுவப்புரட்சி காரணமாக பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து துணை அதிபராக இருந்த முகமது வகீத், மாலத்தீவின் அதிபரானார்.

இந்நிலையில், கடந்த மாதம் 7ம் தேதி மாலத்தீவில் 2-வது முறையாக அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில், தற்போதைய அதிபர் முகமது வகீத், முன்னாள் அதிபர் முகமது நஷீத், முன்னாள் அதிபர் கயூமின் சகோதரரும், மாலத்தீவு முற்போக்கு கட்சி வேட்பாளருமான அப்துல்லா யாமீன், ஜமூரி கட்சி வேட்பாளர் காசிம் இப்ராகிம் ஆகியோர் போட்டியிட்டனர்.
மாலத்தீவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரம். 192 தீவுகள், 40 ரிசார்ட்டுகள் ஆகியவற்றில் 470 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது.
வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தலில் முன்னாள் அதிபர் முஹம்மது நஷீத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், வாக்குப்பதிவின் போது ஏகப்பட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தனர் எதிர்க்கட்சிகள்.
வழக்கை விசாரித்த நீதிபதி, செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல் செல்லாது எனவும், எனவே வரும் நவம்பர் மாதம் 3ம் தேதிக்குள் மாலத்தீவில் மறுதேர்தல் நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications