ஒரு சிலர் மட்டும் கோடிக்கணக்கில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பெறுவது எப்படி?: உச்சநீதிமன்றம் கேள்வி
பண விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
டெல்லி: பொதுமக்கள் பணம் எடுக்க சிரமப்படுவதாக புகார்கள் வரும் நிலையில், ஒரு சிலர் மட்டும் கோடிக்கணக்கில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பெறுவது எப்படி? என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் பொதுமக்கள் பணம் இல்லாமல் சிரமப்படுவதாக புகார்கள் வரும் நிலையில் சோதனைகளின் போது கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்படுவது எப்படி என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ஒரு சில தனியார் வங்கிகளின் மேலாளர்களே அத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அப்போது வாரத்திற்கு ரூ.24 ஆயிரம் பெறமுடியாமல் பொதுமக்கள் அவதி பெற்று வருவதாக தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும் வங்கி வாசலில் மக்கள் இன்னும் வரிசையில் நின்று பணம் எடுக்க காத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், ஒரு சிலர் மட்டும் கோடிக்கணக்கில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பெறுவது எப்படி? என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பணத்தட்டுப்பாடு இன்னும் 15 நாட்களில் சரிசெய்யப்படும் என மத்திய அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.